சனி, மார்ச் 01, 2014

வாழ்த்தும் ! வருத்தமும்!!

இனிய தமிழர்களச் சொந்தங்களே,
வணக்கம்!

நமது தென் மண்டலச் செயலாளரும் தமிழர்களத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவருமான தம்பி மை. பா. சேசுராஜ் அவர்கள் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்திருப்பதை இன்றைய செய்தித்தாள்கள் வழியாக உறுதிப்படுத்திக் கொண்டேன். அவருடைய இந்தப் புதிய பயணம் அவருக்கும் இச் சமூகத்திற்கும் நற்பயன் தருமெனில் என் வாழ்த்துக்கள்.
தம்பியின் இந்த முடிவு முற்றிலும் அவரது தனிப்பட்ட முடிவேயன்றி எனக்கும் தமிழர்களத்திற்கும் இதில் தொடர்பு ஏதும் இல்லை. தமிழர்களத்தின் நிலைப்பாட்டை சில கிழமைகளுக்கு முன்பாகவே நான் தெளிவாகவும் வெளிப்படையாகவும் தெரிவித்துவிட்டேன்.
தெளிவான இலக்கோடும் கொள்கைப் பிடிப்போடும் நாம் மேற்கொண்டுவரும் இப்பயணம் இனி புதிய வலுவோடும் புதிய உற்சாகத்தோடும் தொடர நாம் அனைவரும் உறுதி பூணுவோம். எத்தகைய இடர் வரினும், இழப்பு நேரிடும் அண்ணன் நான் உங்களோடு கை கோர்த்து, தோள் கொடுத்து உடன் வருவேன்!
இன்று காலை மற்றுமொரு செய்தி ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது. நமது இயக்கத்தின் பக்க பலமாக இருந்துவந்த பெங்களூர் வழக்கறிஞர் இறையடியான் (தேவதாஸ்) இன்று காலமானார். எளிமை, துணிவு, தளராச் செயற்பாடுகள் என்பவற்றின் அடையாளமாகத் திகழ்ந்தவர் திரு. இறையடியான். கர்நாடகத் தமிழர்களின் உரிமைப் போராட்டங்களில் களங்கள் பல கண்டவர், அடக்குமுறைகள் பல சந்தித்தவர்! வாழ்க அவரது புகழ்!!
விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் தமிழர்களத்தின் பொதுக்குழுவில் நாம் சந்திப்போம்.
அறத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்! அறமே வெல்லும்!!
தோழமையுடன்,
அரிமாவளவன்
பொதுச் செயலாளர்,
தமிழர்களம்