
தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
சனி, ஏப்ரல் 28, 2012
வெள்ளி, ஏப்ரல் 27, 2012
திங்கள், ஏப்ரல் 23, 2012
வியாழன், ஏப்ரல் 19, 2012
மின் கட்டண உயர்வும் தனியார் மயமும்


கடுமையான மின்வெட்டில் சிக்கித் தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பினரும் கொந்தளித்துப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஒரு பக்கம் நெருக்கடி காலத்திற்கான அவசர உதவியாகக் கூட இந்திய அரசு தனது உடைமையாக உள்ள நெய்வேலி மின் நிலையத்திலிருந்து மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு வழங்க முன்வரவில்லை. இன்னொரு பக்கம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின்சாரம் விற்றுவரும் சில தனியார் நிறுவனங்கள் மின்சாரம் வழங்காமல் முடக்கிப்போட்டுள்ளன. இவற்றின் விளைவாக தமிழ்நாடு இருட்டில் அமிழ்ந் துள்ளது.
கடுமையான மின்வெட்டு இருக்கும் இந்த நிலையில் கூட மின்சார ஒழுங்குமுறை ஆணை யம் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது பற்றி கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகிறது.
மின்வெட்டை நீக்கி மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கத் திராணியற்ற தமிழக அரசு 9741 கோடி ரூபாய்க்கு மின் கட்டண உயர்வைக் கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மனுப் போட்டுள்ளது. கேட்டால் 53,300 கோடி ரூபாய் இழப்பில் சிக்கி மின்சார வாரியம் மரணப்படுக்கையில் கிடக்கிறது என சட்ட மன்றத்தில் அறிக்கை படிக்கிறார் முதலமைச்சர் செயலலிதா.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இவ்வளவு கடன் சுமை உயர முதன்மைக் காரணம் எது? இவ்வினாவிற்கு விடையளிப்பதுதான் இக் கட்டுரையின் நோக்கம்.
தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழக அரசு நிறுவனமாகும். மின்சார வாரியம் தனது மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்த மின்சாரம், நெய்வேலி நிறுவனம் மற்றும் இந்திய அரசு தொகுப்பிலிருந்து பெறப்பட்ட மின்சாரம் ஆகியவற்றை வழங்கி வந்தது. உற்பத்தி செலவை விட பெரும்பாலான மக்களுக்கு விலை குறைவாக மின்சாரம் வழங்கியதால் அது ஓரளவு இழப்பை சந்தித்தது.
ஆயினும் பெரிய நிறுவனங்களுக்கும் வணிக வளாகங்களுக்கும் கூடுதல் கட்டணம் விதித்து பெற்ற நிதியை வீடு களுக்கும் வேளாண்மைக்கும் குறைந்த கட்டணத்திற்கு மின் சாரம் வழங்கப் பயன்படுத்திக் கொண்டது. சேவைத் துறை என்ற முறையில் ஆண்டு தோறும் ஏற்பட்ட இந்த இழப்பு 2002 ஆம் ஆண்டு 1970 கோடி ரூபாய் என்ற அளவை எட்டிய போது இத்தொகையை தமிழக அரசு மின்சார வாரியத்திற்கான கடன் பத்திரமாக மாற்றி சரி செய்தது. இந்த கடன் தொகை யையும் மின்சார வாரியம் பின்னர் அடைத்து விட்டது.
ஆனால் அதற்கு பத்தாண்டு களுக்கு முன்பு பிரதமராக பி.வி. நரசிம்மராவாவும் நிதியமைச் சராக மன்மோகன் சிங்கும் பதவி வகித்த காலத்தில் புதியப் பொரு ளாதாரக் கொள்கை என்ற பெயரில் அறிமுகப் படுத்திய தனியார்மய- தாராள மயக் கொள்கை மின்சாரத் துறையையும் தாக்கியது. மின் சாரத்துறையை தனியார் முதலா ளிகளின் கைகளுக்கு மாற்றி விடும் திட்டம் தலையெடுத்து வேக மாகப் பரவியது.
1994 ஆம் ஆண்டிற்கு பிறகு மின்சார வாரியங்கள் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங் குவதை இந்திய அரசு அனு மதிக்க வில்லை. அரசின் மின் வாரியங்கள் மின் உற்பத்தி நிலையங்களை தொடங்க வேண்டுமென்றால் நடுவண் மின்சார ஆணையத்திடம் (CENTRAL ELETRICITY AUTHORITY) முன் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது.
இந்த ஆணையம் அரசு மின் உற்பத்தி நிலையங்களுக்கு எல்லா வகையிலும் தடை ஏற்படுத்தி வந்தது. அதே நேரம் அரசின் தனியார்மயக் கொள் கை தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு ஊக்குவிப்பு வழங்கியது. இதற்கேற்ப மின் வழங்கல் சட்டத்தில் 1994 ஆம் ஆண்டு திருத்தங்கள் செய்யப் பட்டன.
இந்திய அரசு 2003 ஆம் ஆண்டு கொண்டு வந்த மின்சாரச் சட்டம், மின்சாரக் கட்டணம் நிர்ணயிப் பது தொடர்பாக மாநில அரசுக்கு இருந்த அதிகாரத்தை பறித்து இந்திய அரசின் கட்டுப் பாட்டில் அமைந்த மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் ஒப்படைத்தது. தமிழக அரசு மின் கட்டணத்தைத் தானே தீர்மா னிக்க முடியாது, தனது தேவையை இவ்வாணையத் திடம் கோரி அதன் ஆணைக் கேற்ப மின் கட்டணம் தீர்மா னிக்கப்படவேண்டும். இந்த மின்சாரச் சட்டம் மாநில அரசுகள் வழங்கி வந்த எளியோருக்கான மானியத்தை குறைக்க வேண்டு மென்று வலியுறுத்தியது. மின்சார ஒழுங்கு முறை ஆணையம் இக்கொள் கையை செயல் படுத்தும் அமைப்பாக விளங் கியது.
இந்திய அரசின் தனியார் மயக் கொள்கை, மேற்கண்ட சட்ட ஏற்பாடுகள் வழியாக மின்சாரத்துறையில் நிலை நிறுத்தப்பட்ட பிறகுதான் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு பல மடங்காக உயர்ந் தது. அரசுத் துறை நிறுவனமான மின்வாரியம் தமிழகத்திற்குத் தேவையான மின்சாரத்தை தானே உற்பத்தி செய்துகொள்ள முடியாமல் முடக்கப்பட்டது. மறுபுறம் மின்சாரத் தேவைகள் மிக வேகமாக அதிகரித்தன. இதனை ஈடுகட்ட தனியார் மின் உற்பத்திக் குழுமங்களிடம் அவர் கள் சொல்லும் விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்நாடு மின்வாரியம் உள்ளாக்கப் பட்டது.
பெரிதும் தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து காசு கொடுத்து மின்சாரத்தை வாங்கி மக்களுக்கு வழங்கும் முகமை நிறுவனமாக தமிழ்நாடு மின்சார வாரியம் மாறிப் போனது.
தனியார் மின் உற்பத்திக¢ குழு மங்களிடம் மின்சாரம் வாங்குவதற்த் தமிழக அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் பெரு மளவுக்கு மின்வாரியப் பணத்தை தனியாருக்கு வாரி வழங்குவதற்கு ஏற்ற வகை யிலேயே அமைந்தது. இவற் றிடம் மிக அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங் கியது மட்டுமின்றி , மின்சாரம் உற்பத்தி செய்யாமல், வழங் காமல் சும்மா இருந்த காலத் துக்கும் நிலைக்கட்டணம் என்ற பெயரால் பல நூறு கோடி ரூபாயை மின்வாரியம் கொட்டிக் கொடுத்தது. ஒரு தனியார் மின் உற்பத்தி நிலையம் மின் உற்பத்திக்கு அணியமாக இருப் பதாக ஒப்பந்தம் ஆகி விட் டாலே போதும், உற்பத்தி செய்யாத காலத்திற்கும் ஒரு நாளைக்கு ஏறத்தாழ ஒருகோடி ரூபாய் அந்நிறுவனத்திற்கு மின் வாரி யம் அழவேண்டும்.
எடுத்துக்காட்டாக நாகை மாவட்டம் சீர்காழி அருகி லுள்ள பிள்ளைப்பெருமாள் நல்லூரில் ஆந்திராவின் டாக்டர் சி.பிரதாப்ரெட்டி குழுமத் திற்கு மின் உற்பத்தி நிலையம் அமைத்துக்கொள்ள இசைவு வழங்கப்பட்டது. பிள்ளைப் பெருமாள் நல்லூர் மின் உற் பத்திக் குழுமம் என்ற பெயரா லேயே பிரதாப் ரெட்டி குழுமத் தினர் அந்நிலையத்தை நிறு வினர். ரெட்டி லேப்ஸ், அப்பல் லோ மருத்துவமனை ஆகியவற் றின் முதலாளிதான் இந்த பிரதாப்ரெட்டி.
இந்த பிபிஎன் நிறுவனத் திடமிருந்து ஒரு யூனிட் 17 ரூபாய் 80 காசுக்கு மின்சாரம் வாங்குகிறது தமிழக அரசு. மின்சார வாரியத்தின் சொந்த உற்பத்தி நிலையங்களில் 1 யூனிட் உற்பத்தி விலை 2 ரூபாய் 15 காசு என்பதை இத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தக் கொள்ளை யின் அளவு புரியும்.
கடந்த ஆண்டு முழுவதும் இந்நிறுவனம் மின்சார வாரியத் திற்கு விற்றது 24.4 கோடி யூனிட் மின்சாரம். ஒப்பந்தபடி இந்த மின்சாரம் 35 நாள்கள் உற்பத்திக்குச் சமமானது
எஞ்சிய 330 நாள்களுக்கு இந்த நிலையம் உற்பத்தியே செய்ய வில்லை என்றாகிறது. ஆயினும் சும்மா இருந்த நாள்களுக்கு நிலைக் கட்டணமாக 330.04 கோடி ரூபாயைத் தட்டிச் சென்றது.
இது போல் ஐந்து தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு மட்டும் ஆண்டுக்கு 1006 கோடி ரூபாயை உற்பத்தி இல்லாத காலங்களுக்கு நிலைக் கட்டண மாக மின்சார வாரியம் வழங்கி யுள்ளது.
ஐந்து தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கும், முடைக் காலத்தில் வெவ்வேறு மின் உற்பத்தி நிலையங்களிடம் அவ்வப்போது வாங்கிக் கொண் டதற்கும் மட்டும் கடந்த ஆண்டு 8884.4 கோடி ரூபாய் மின்வாரியம் வழங்கியிருக் கிறது.
சட்டமன்றத்தில் முதல மைச்சர் செயலலிதா அளித்த அறிக்கையில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 10,000 கோடி ரூபாய் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்ட தாகக் கூறினார். மேற்கண்ட ஐந்து நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை கட்டுப் படுத்தியிருந்தாலே இந்த இழப் பில் ஏறத்தாழ 8 ஆயிரம் கோடி ரூபாயைக் குறைத்திருக்க முடி யும்.
மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் மின்சாரத் தீர்ப் பாயமும் எவ்வாறு தனியார் நிறுவ னங்களின் கொள்ளைக் குத் துணைபோய் மின் வாரியத் தை கடன் சேற்றில் சிக்க வைக் கின்றன என்பதற்கு ஓர் எடுத் துக்காட்டைப் பார்க்கலாம்.
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2010 ஆம் ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்திய போது பன்னாட்டு வடநாட்டுத் தகவல் தொழில் நுட்ப நிறு வனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.1.80 முதல் ரூ.2.50 வரை கட்டணச் சலுகை வழங்கி அறிவித்தது. இவ்வாறு கட்டணச்சலுகை வழங்குமாறு தமிழக அரசும் கோரவில்லை; அந்த நிறுவ னங்களும் கோரவில்லை. மக்கள் கருத்தும் கோரப்படவில்லை. தானடித்த மூப்பாக தகவல் தொழில்நுட்பக் குழுமங்களுக்கு இக்கட்டணச்சலுகையை வாரி வழங்கியது ஆணையம்.
ஒழுங்குமுறை ஆணையம் தான் இவ்வாறு என்றால் மின்சாரக் கட்டணம் தொடர்பான மேல் முறையீடுகளை விசாரிக்கும் உச்ச அமைப்பான மின்சாரத் தீர்ப்பாயமும் அதற்கு மேல் இருக்கிறது. பிரதாப் ரெட்டியின் பிபிஎன் நிறுவனம் தனக்கு மின்சார வாரியத் திலிருந்து 189 கோடி ரூபாய் பணம் நிலுவையுள்ளது என வழக்குத் தொடர்ந்தது. அவ் வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் பிபிஎன் குழுமம் கேட்டதை விடப் பல மடங்கு அதிகமாக இழப் பீட்டை கணக்கிட்டு ரூ 1050 கோடி வழங்குமாறு மின்சார வாரியத்திற்கு ஆணை யிட்டது.
இப்போதும் பிபிஎன் உள் ளிட்ட நான்கு தனியார் நிறு வனங்கள் மின்சாரம் வழங்கு வதை நிறுத்தி வைத்திருப்பதால் மின்வெட்டு இன்னும் கூடுதல் ஆகிறது.
இந்திய அரசு திணித்து தமிழக அரசு ஏற்றுக்கொண்ட தனியார்மயம் தமிழ்நாட்டு மின்சாரத்துறையில் திரும்பியப் பக்கமெல்லாம் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. தனியார் நிறுவனங்களுக்கு ஞாயமே இன்றி மின்உற்பத்தியும் மின் வழங்களும் இல்லாத காலத் திலும் ஆண்டுதோறும் வழங்கப் படும் நிலைக் கட்டணமான ரூபாய் 1000 கோடியை நிறுத்தி வைத்து மின்சார வாரியம் மின்உற்பத்தி நிலையங்களை நிறுவியிருந்தால் கடந்த பத் தாண்டுகளில் அரசுத் துறையில் 9000 மெகாவாட் மின் உற்பத்தித் திறனை கூட்டி யிருக்க முடியும்.
தேவையற்ற - ஞாயமற்ற தனியார் கொள்ளையை மின்சாரத் துறையில் அனுமதித்துவிட்டு அதில் ஏற்படும் இழப்பை மக்கள் தலையில் கட்டுவது எந்த வகையில் ஏற்கத்தக்கது-?
சிலர் நினைப்பது போல் உழவர்களுக்கு வழங்கும் விலை யில்லா மின்சாரமோ, நெச வாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்த கட்டண மின் சாரமோ மின் வாரிய இழப் பிற்குக் காரணமல்ல. தனியார் கொள்ளையே காரணம்.
தமிழ்நாடு மின்சாரத் துறையை தனியார் கட்டுப்பாட்டிலிருந்து மீட்டு அரசுத் துறையை ஓங்கச்செய்வதே தாறுமாறான மின் கட்டண உயர்விலிருந்து மக்கள் தப்பிப்பதற்கு உள்ள ஒரே வழி ஆகும்.
திங்கள், ஏப்ரல் 16, 2012
கூடங்குளத்தில் கூடாத உலை! - பகுதி2
மின்சாரத்திற்கு மாற்று என்ன? என்ற கேள்வி
ஒவ்வொருவர் மனதிலும் தோன்றுவது இயற்கை.
அதே வேளையில் மாற்று பற்றி எழுதுபவர்கள்
எல்லாம் தெரிந்தவர்கள் அல்ல.
அவர்களால் மட்டுமே மிகத் துல்லியமாக, சிறப்பாக
மாற்றுக்களைக் கூறமுடியும்.
அப்துல் கலாமுக்கு அணுமின்னுக்கு மாற்று தெரியாதா?
கலாமைப் போன்ற புகழ்பெற்ற தமிழக அறிஞர்,
பொறிஞர் பலருண்டு. அவர்களுக்கெல்லாம் தெரியாததா?
அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்களை
நிறுவச் சொன்னால் அருமையான மாற்றுத்திட்டங்களைச்
செய்யக் கூடியவர்கள்.
ஆனால் அவர்களாலும் அவர்களைப் போன்றவர்களாலும்
கூடங்குளம் வேண்டாம் என்று சொல்லவே முடியாது.
அரசாங்கப் பணி செய்து கொண்டு அரசாங்கத்தின் அரசியல்
விருப்புகளுக்கு மாறாக ஞாயத்தையும் உண்மையையும்
குடியரசு நாட்டில் சொல்ல முடியாது.
அணு உலைக்கு மாற்றாகப் பலரும் கூறுவது,
மரபுசாரா மின்சக்தி உற்பத்தியையே. அது கதிரொளி,
காற்று, கழிவு, கடலலை போன்றவற்றைப் பயன்படுத்தி
உற்பத்தி செய்யப்படுகிறது.
காற்றாலைகளை எடுத்துக் கொள்வோம். இந்தியாவிடம்
மிக நீண்ட கடற்கரை உள்ளது. அதில் தமிழகத்தின்
கடற்கரை நீளம்தான் மிக அதிகம் (1076 கி.மீ).
மண்டலம் மண்டலமாகப் பிரித்து அந்தந்த மண்டலத்திற்குத்
தேவையான மின்சாரத்தைச் சிறிய சிறிய காற்றாலைகளில்
பெற்றுக்கொள்ளலாம். தற்போது தமிழ்நாடு/இந்தியா முழுவதும்
மின்சாரத்தை அனுப்புவதால் உண்டாகும் வழிஇழப்பையும்
தவிர்க்கலாம்.
ஒரு மெகாவாட்டு மின்சாரம் தயாரிக்கும் முனையலுக்கு
ஆகும் செலவென்ன தெரியுமா? 5 கோடி உரூவாய்.
இது ஒன்றும் ஆதாரமில்லாத வெற்றுத் தரவல்ல.
தமிழக அரசாங்கத்தின் காற்றாலைத் திட்டத்திற்கான
ஆவணத்தில் சொல்லப்பட்டிருக்கும் அரசாங்கத் தரவு.
(படிக்க வேண்டிய ஆவணம்)
http://www.tn.gov.in/citizen/teda.pdf
அப்படியென்றால், 2000 மெவா காற்றாலை
மின்சாரத்திற்கு ஆகக்கூடிய செலவு 10,000 கோடி
உரூவாய்.
கூடங்குளத்தில் 2000 மெவா அணு மின்சாரம் உற்பத்தி
செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதில் 1000 மெவா
அளவுக்கு மட்டுமே வேலை முடிந்திருக்கிறது.
அதற்குள் ஆகியிருக்கும் செலவு என்ன தெரியுமா?
யாருக்கும் தெரியாது. ஆனால், 2007ஆம்
ஆண்டுக்குள்ளாக 17,000 கோடி உரூவாய்
செலவாகிவிட்டது என்பது எல்லோருக்கும்
தெரியும்.
10,000 கோடி உரூவாயில் யாருக்கும் இன்னல்
இல்லாமல், ஒரே இடத்தில் என்று இல்லாமல்
பரவலாக அமைக்கக் கூடிய எளிமையான,
மாசுக்கேடு இல்லாத காற்றாலை மின்சாரத்தை
விட்டுவிட்டு, குறைந்தது 25,000 கோடி உரூவாய்
செலவாகக் கூடிய இன்னலும் இடரும் மிகுந்த
அணு உலைத் திட்டம் எதற்கு?
கடற்கரையில் மட்டும்தானா காற்று? தமிழ்நாட்டில்
மேற்கு, கிழக்கு மலைத்தொடர்கள் உள்ளன.
அதுவன்றி பல குன்றுகள் உள்ளன. இவையெல்லாம்
காற்றாலைக்கு மிகப் பொருத்தமான சூழல்கள்.
வடகிழக்கு, தென்மேற்குப் பருவக்காற்றுகள்
என்றும் வளமையானவை காற்றாலைக்கு.
உள்ளூர் ஆதாரங்களைக் கணக்கில் கொன்டு
திட்டங்கள் செய்ய வேண்டும். கடனுக்குக்
கிடைக்கிறதே என்றும், பகட்டாக இருக்கிறதே என்றும்
வெளிநாட்டுக்கு ஓடி ஓடி இந்தியர்களின் பணம்
வீணடிக்கப் படுகிறது.
உலகிலேயே பெரிய காற்றாலை நிறுவனங்களில்
இந்தியாவின் சுசலான் நிறுவனமும் ஆகும்.
துவங்கி பன்னிரண்டாண்டு காலத்துக்குள் இந்தியா முழுதும்
5000 மெகாவாட்டு மின் உற்பத்தியை அவர்களின்
காற்றாலைகள் செய்கின்றன. கூடங்குளத்திலும்
ஒரு சுசலான் காற்றாலை உண்டு. உலகின்
ஆறாவது பெரிய காற்றாலை நிறுவனம் சுசலான்.
http://www.suzlon.com/images/Media_Center_News/185_SEL%20-%20SE%20Press%20Release%20%205%20GW%2024.9.2010.pdf
இந்தியா வருங்காலத்தில் 31,000 மெவா
உற்பத்தியை 30 அணு உலைகளைக் கொண்டு
செய்யவிருக்கிறது. 2,000 மெகாவாட்டுக்கே 25,000 கோடி
என்றால் இந்த 31,000மெகாவாட்டுக்கு எவ்வளவு
செலவு? எவ்வளவு காலம் பிடிக்கும் என்று
எண்ணிப் பார்க்க வேண்டாமா?
காற்றாலை நிறுவனங்களை மேலும்
வளர்த்துத் தேவையான மின்சாரத்தில்
கணிசமான பகுதியை காற்றாலைகளின்
மூலம் விரைவில் பெறலாமன்றோ?
காற்றாலை மட்டும் போதுமா? என்றால்
போதாதுதான். கதிரொளி, கழிவுகள் என்று
வேறும் வழிகள் எவ்வளவோ உண்டே!
அரசாங்கங்கள் மேலும் பொறுப்புடன்
செயல்பட்டால் எவ்வளவோ செய்யலாம்தான்.
இலவசங்களை வாரி வாரி வழங்கும்
அரசாங்கங்கள் அவைகளை எல்லாம்
கதிரொளியில் இயங்கும் அரவைகள்,
கதிரொளியில் இயங்கும் தொலைக்காட்சிகளாக
இலவசமாகக் கொடுக்கலாமே?
பள்ளிக்கூடத்திலும் பிள்ளைகளுக்கு காலை,
இந்த நாட்டு அரசுகளுக்கு மட்டுமே உண்டு.
நன்கு சிந்தித்துப் பாருங்கள். இரண்டு பிள்ளைகள்
படிக்கிற 4 பேர் குடும்பம் என்றால், பிள்ளைகளுக்கு
இருவேளைச் சோறு பள்ளிக்கூடத்தில்.
அவர்களுக்கும் சேர்த்து வீட்டிற்குத் தேவைக்கு மேல்
இலவச அரிசி. தேவைக்கு மேலே உள்ள அரிசி
எங்கே போகும்?
பொருளாதார மேதைகள் ஆளும் நாட்டில் மட்டும்தான்
இந்தப் பொருளியல் கொள்கைகளுக்கு வாய்ப்பு உண்டு.
அரிசி இலவசம் கவர்ச்சியாக இல்லையென்றால்
கணி இலவசம்!
இப்படியெல்லாம் செய்வதற்குப் பதில்,
கதிரொளியில் இயங்கும் மின்விளக்குகள்,
மின்விசிறிகள் போன்றவற்றைப் பள்ளிப்
பிள்ளைகளுக்கு இலவசமாய்க் கொடுக்கலாமே?
மக்களுக்கு அந்தவகையில் மின்சாரம்
தரவேண்டிய கடப்பாடு குறைந்துவிடுகிறதல்லவா?
அணு உலைக்குக் கொட்டும் காசை
கதிரொளி மின்வளர்ப்பிற்குத் திருப்பலாமே?
குசராத்தில் சுடுகாட்டையே
கதிர்-மின்-சுடுகாடாக்கியிருக்கையில்
கதிர்-மின் ஆற்றலை எப்படியெல்லாம்
அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தலாம்
என்று எண்ணிப் பார்க்க நிறைய இருக்கிறதே!
வெளிநாட்டு நிறுவனங்கள் என்றால் கையைக்
கட்டி வாயைப் பொத்தி மின்சாரத்தைத்
தடையின்றி தரும் தமிழக இந்திய
அரசாங்கங்கள் காற்றாலை வழியாக,
பெரிய இந்திய, வெளிநாட்டு நிறுவனங்கள்
அவரவர் மின்சாரத்தை அவரவர்
பார்த்துக் கொள்ளவேண்டும் என்று
சொல்லலாமே?
1000 கோடிக்கு மேல் முதலீடு செய்யும்
எந்த நிறுவனமாயினும் அவரவர் மின்சாரத்தை
அவரவரே தயாரித்துக் கொள்ள முடியுமே?
சிறிய நடுத்தர நிறுவனங்களை விட்டுவிட்டு
1000 கோடிக்கு மேல் உள்ள நிறுவனங்களுக்கு
மின்சாரத்தில் சிறு பகுதியை மட்டும்
கொடுத்து, பெரும் பகுதியை அவர்களையே
மரபுசாரா முறையில் தயாரித்துக் கொள்ளச்
செய்ய முடியுமே.
அதை விடுத்து அப்பாவி பொதுமக்களை
நாளைக்கு 6 மணி நேரம் மின்சாரத்தை இழந்து
வாடவைத்துத்தான் வல்லரசு ஆக முடியுமா?
பல்வேறு வகையானும் அறிவுக்கூர்மையுடன்
அரசாங்கங்கள் செயல்படாமல், மக்களை
வாட்டி வதைப்பதோடு அணு உலைகள்
போன்ற ஆபத்துகளையும் அருகே
குடியேற்றுவதில் ஞாயம் இல்லை!
ஒருங்கிணைந்த பன்முகத்திட்டத்தைச்
செய்யவேண்டுமேயன்றி, மக்களை
வாட்டி வதைத்து நாட்டை முன்னேற்றுவோம்
என்பது அரசுகளின் கையாலாகாத நிலையையே
காட்டுகிறது.
கடந்த 8/10 ஆண்டுகளாக அரசியலைக்
கூட்டத் தொடராவது அடிதடியில்லாமல்
இவர்களா அணு உலைகள் போன்றவற்றை
போபாலில் சொந்த நாட்டு மக்களுக்குப் பெரும் சேதம்
விளைவித்த யூனியன் கார்பைடு நிறுவன முதலாளியை
தனிப் பறனையில் இரகசியமாகத் தப்ப வைத்த
அரசாங்கங்களா நீண்ட நாளைக்கு அணு உலையில்
பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் பக்கம் நிற்கும்?
அம்மக்களுக்கு நீதி கிடைக்க 24 ஆண்டுகள் ஆயின.
24 ஆண்டுகள் கழித்து கிடைத்த இழப்பீட்டுத் தொகையை விட
சிறு கோயில் வாசலில் பிச்சையெடுத்து வாழும் பிச்சைக்காரன்
பன்மடங்கு சம்பாதித்திருப்பான்.
மிகப் பெரிய அறிவியல் அறிஞர்களை
எல்லாம் சமாதான ஏற்பாட்டிற்கு அனுப்புகிறார்களாம்.
கலாம் உள்ளிட்ட எந்தப் பெரிய அரசுப் பணி செய்த
பொறிஞராயினும், அறிவியல் அறிஞராயினும்
"போபால் விசவாயு விதயத்தில் அரசாங்கம் நடந்து கொண்டது
சரியில்லை; அம்மக்களுக்கு 24 ஆண்டுகள் கழித்துக் கொடுக்கப்
பட்ட மிகச்சிறு பணம் ஞாயமற்றது", என்று அறிக்கை விடுக்க
துணிவு உடையவர்களா? அது போலச் செய்திருக்கிறார்களா?
கண்டுபிடிப்புகள், அல்லது கட்டி அமைத்தல் ஆகியவற்றை
மட்டும்தான் அரசாங்கப் பொறிஞர்கள் அறிஞர்கள் செய்ய முடியும்.
அதைத்தாண்டி குமுகத்தில் மக்களுக்கு இன்னல் ஏற்பட்டால்
இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. பேசமாட்டார்கள்.
அதற்குத் துணிவும் அவர்களுக்குக் கிடையாது.
ஆழ்ந்த அனுதாபங்களைக் கூட உயர் அரசுப்பணியாளர்களால்
சொல்ல முடியாது.
அப்படியென்றால், மக்களின் மனநிலைக்கு
எதிராக இவர்கள் சமாதானம் சொன்னால்,
இவர்கள் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும்
மக்கள் ஏன் கேட்கவேண்டும்?
அன்புடன்
நாக.இளங்கோவன்
நன்றி: நயனம் .ப்லொக்ச்பொட் .காம்
கூடங்குளத்தில் கூடாத உலை!
கொண்டிருக்கும் அதே தமிழகம் மின்சார உற்பத்திக்காக
கட்டப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ள
கூடங்குளம் அணுமின் உலையை எதிர்த்துக்
குரல் கொடுக்கிறது.
மின்விசிறி, மின்விளக்கின் பயனை கடந்த 60/70
ஆண்டுகளில் துய்த்திருக்கும் தமிழகம், அதனை
உற்பத்தி செய்யும் விதங்களைத் தற்போது
ஊன்றிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது என்பது
மிக நல்ல மாற்றம்.
பொறியியல், அறிவியல் வயப்பட்ட தமிழகம்
அதில் தனது வாழ்வாதாரங்களையும், தனது
சந்ததிகளையும் தொலைக்கக் கூடிய ஒன்றை,
அது எப்பேறுபட்ட அறிவியலாயினும்
தூக்கி எறியத் தயாராகியிருப்பது மிக நல்ல
மாற்றம்.
1986ல் உருசியாவின் செர்னோபில் அணு உலை
வெடித்து பேரழிவை ஏற்படுத்திய ஆகப்பெரிய
அறிவியலைக் கண்டு உலகமே நடுநடுங்கிக் கிடந்தாலும்,
அவசர அவசரமாக 1988ல், அதே உருசியாவிடம்
சென்று கூடங்குளத்தில் உருசியாவின் அணு உலையைக்
கட்ட இந்தியா ஒப்பந்தம் போட்டது.
அதுவும் 4% வட்டி கட்டுகிறோம், இரண்டரை பில்லியன்
வெள்ளி கடனுக்கு அதைக் கொடுங்கள் என்று
ஒரு கடன்கார ஒப்பந்தம் போட்டது இந்தியா.
அன்றைய நிலையில், உருசியாவுடன் இவ்வளவு பெரிய
ஒப்பந்தங்களைக் கண்ட அமெரிக்காவிற்குக்
கண்கள் சிவக்காமல் இருந்திருக்குமா? என்பது தனிக்கதை.
1986ல் வெடித்த உருசிய அணு உலை, உடனடியாகவும்,
கதிரியக்கத்தால் ஏற்பட்ட பல படு பயங்கர நோய்களாலும்,
1986 தொடங்கி 2004ஆம் ஆண்டு வரை மட்டும் 9,85,000
மக்களைக் கொன்றுள்ளது.
http://www.redfortyeight.com/2011/05/01/chernobyl-death-toll/
http://richardbrenneman.wordpress.com/2011/03/25/the-chernobyl-death-toll-1000000-not-4000/
இன்னும் செர்னோபில் அணு உலையால் தொடர்ந்து
கொண்டிருக்கும் சாவுகளையும், எதிர்காலத்தில்
தொடரக்கூடிய சாவுகளையும் கணக்கிடும் அறிஞர்களின்
கூற்றுகள் நடுங்க வைக்கின்றன.
அணுத்துறை அறிஞர்களும் இந்திய உருசிய அரசியல்வாதிகளும்,
"செர்னோபில் அணு உலையில் இருந்த குறைபாடுகளைக்
கண்டறிந்து கூடங்குளம் அணு உலையில் அவ்வாறு
ஏற்படாதவாறு செய்யப்பட்டு விட்டது" என்று சொல்வது,
"கூடங்குளம் அணு உலை ஒருவேளை வெடித்துச் சிதறினால்,
அதில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, அதன்பின்
கட்டப்படும் அணு உலைகளைச் சரி செய்துவிடுவோம்"
என்று சொல்வதாகவே எடுத்துக் கொள்ளமுடிகிறதே தவிர
பெரிதாக அணு உலை நுட்பத்தின்பால் பற்று
ஏற்படுத்துவதாக இல்லை.
"எந்த ஆலையானாலும், எந்திரங்களானாலும்
ஆபத்துகள் நிறைந்தே இருக்கின்றன - அதற்காக
நாம் அணு உலையை விட்டுவிடவேண்டுமா? -
என்று சில அரசியல், அறிவியல் துறைகள்
பரப்புரை செய்தாலும், "ஒரு தடவை வெடித்தால் -
நூறு தலைமுறை சாவும்" என்ற உண்மையை
செர்னோபில் நிறுவியிருக்கையில்,
தமிழகத்தில் அணு உலை தேவையா என்று
எண்ணிப் பார்க்க வேண்டியது மனிதசாதியின்
கடமை அல்லவா?
"கட்டத் தொடங்கும் போது என்ன செய்தீர்கள்? -
இப்பொழுது வந்து எதிர்க்கிறீர்களே" என்று
கேட்கும் அரசியல் பீடங்களும், அறிவியல் பீடங்களும்
ஒன்றை எண்ணிப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள்.
"கற்றலும் பட்டறிவு என்பதும் வாழ்வியலின்
தொடர் கல்வி" என்பதை அவர்கள் தங்கள்
வசதிக்காக மறந்து விடுகிறார்கள். தாங்கள்
செய்ததை ஞாயம் என்று நிறுவ இயற்கையையும்
சந்ததிகளையும் காவு கொடுக்கத் தயாராகிவிடுகிறார்கள்.
நாசகார அறிவியலோடு அரசியலும் சேர்ந்து
கொள்ளும்போது அது மாபெரும் அழிவு
சக்தியாக உருவெடுத்துவிடுகிறது. அதன் பற்கள்
நீண்டு வெளியே தெரிகின்றன.
இந்தச் சக்தியை கேள்வி கேட்க சாதாரண
மக்களுக்கு எந்தநாளும் துணிவு ஏற்படுவதில்லை
தமிழகத்தில்.
அரசியல்வாதிகளே, அறிவியல் அறிஞர்களே,
"எமது வாழ்க்கையையும் எமது சந்ததியையும்
காவு கொடுக்கக் கூடிய ஒரு அறிவியலை
எமது நிலத்திலே எங்கள் பணத்திலே
விதைக்கும் முன்னர், எம்மை
ஒரு வார்த்தையேனும் கேட்டீர்களா?"
"இது இன்னது இது இத்தன்மையது
என்று எங்களுக்குக் கல்வியூட்டியபின்
கட்டினீர்களா?"
"நாங்களாகக் கற்ற கல்வி! எங்கள் கல்வி
உலகில் நடந்த பேரழிவுகளை அலசிப்
பார்க்கச் செய்திருக்கிறது". அதன்
அடிப்படையிலேதான் இந்த அணு உலைகளை
மறுக்கிறோம் - என்று கூடங்குளத்திலே
மக்கள் எழுந்து, நாசகார அறிவியலின்
முகத்திலே கரிபூச நிற்பதிலே ஒரு
பெரிய அறிவு எழுச்சியை காணமுடிகிறது.
ஆனால், அரசும் அறிவியலும் தமது
கல்வியால் ஆணவத்தையே பெற்றிருக்கின்றன.
அந்த ஆணவத்தை கோடிக் கணக்கான
மக்கள் முன்னர் கொடியேற்றி வைக்கின்றனர்.
1988லே துவங்கப்பட்ட கூடங்குளம் அணு உலை
இன்றைக்கு 23 ஆண்டுகளாகி பல்லயிரம் கோடிகளை
ஏப்பமிட்டுள்ளது. அரணவ இரகசியங்கள் போல,
இதன் செலவுகள் வெளியே சொல்லப்படுவதில்லை.
2007ஆம் ஆண்டு வரைக்கும் ஆன செலவு மட்டுமே
17,000 கோடி உரூவாய்.
உருசியாவின் நட்பிற்கு விலை கூடங்குளம்.
அமெரிக்காவின் நட்பிற்கு அதைப்போல
20 உலைகளுக்கான ஒப்பந்தங்களை
இந்தியா போட்டிருக்கிறது. நீண்ட காலம் எடுக்கும்
அணு உலைத் திட்டங்களுக்கு நீண்ட கால நோக்கில்
போடப்பட்டிருக்கும் பொக்கீடு (budget)
20 இலட்சம் கோடிகள். இவ்வளவிற்கும் பின்னர்
இதன் உழைப்பு காலம் வெறும் 25 ஆண்டுகள்தான்.
அதாவது, இன்றைய கூடங்குளத்திலே 2000 மெகாவாட்
மின்னுற்பத்திக்கு உலை கட்டப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவொடு திட்டமிடப்பட்டுள்
20 இலட்சம் கோடிகள், 20,000 மெகாவாட்டிற்கு
திட்டமிடப்பட்டிருக்கிறது. ஓவ்வொரு ஆயிரம் மெகாவாட்
மின்னளவிற்கும் ஒரு இலட்சம் கோடிகள்
திட்டமிடப்பட்டிருக்கிறது.
அறிவியல் அறிஞர்கள் சிலர், அணு உலையை
மறுப்பவர்களை "சாணியுகத்துக் காரர்கள்" என்று
சொல்கிறார்கள். அந்தச் சாணியைப்
பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் எளிய
முறையை கிராமந் தோறும் நிறுவினால்
பல இலட்சம் கோடிகள் தேவையே இல்லை.
தமிழகத்திலே 17,000 கிராமங்கள் இருப்பதாகப்
புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஒவ்வொரு கிராமத்திற்கும்
தேவையான அடிப்படை மின்சாரத்தை 20-30 கோடி உரூவாய்
செலவில் செய்துவிட முடியும். அதாவது இரண்டு
2ஞீ அலைக்கற்றைப் பணத்திலேயே மிக எளிதாகச்
செய்ய முடிந்த ஒன்று.
கூடங்குளத்திலே உலை கட்டினால் 10,000 பேருக்கு
வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சொன்னார்களாம்
அப்போது. ஆனால், இது வரைக்கும் பத்தே பத்து
பேரை தேடித்தான் விளம்பரங்கள் தமிழ்நாட்டில்
வந்துள்ளன என்று கூடங்குளம் போராட்டத்தில்
முக்கிய பங்கு வகிக்கும் உதயகுமார் சொல்கிறார்.
அதுவும் உருசிய மொழி தெரிந்திருக்க வேண்டும்
என்று வேண்டுகோளோடு வந்த விளம்பரமாம்!
சாணியுகம் என்று தாழ்வாகக் கருதக் கூடாது.
அந்தச் சாணியை வைத்து கிராமந்தோறும்
மின்சாரம் தயாரித்தால் பல்லாயிரக்கணக்கான
பேருக்கு உண்மையிலேயே வேலை கிடைக்கும்
என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
அணு உலைகளுக்கு ஆபத்து தானாகவும் வரும்;
இயற்கையின் சீற்றத்தாலும் வரும். அதாவது,
ஆபத்து வரும் என்றால் அது எப்படி வேண்டுமானாலும்
வரும் என்பதுதான் அணு உலைகளின் நிலையாமை.
உருசியாவின் செர்னோபில் விபத்து தானாக வந்தது.
சப்பானின் புகுசிமா விபத்து இயற்கை சீற்றத்தால் வந்தது.
"தானாக வந்த விபத்தா?
இப்போது சரி செய்து விட்டோம்!
பூகம்பத்தால் விபத்து வருமா?
இந்தப் பக்கம் பூகம்பமே வராதுங்க! "
இப்படித்தான் சொல்கிறார்கள் கூடங்குள உலை
ஆதரவாளர்கள்.
அணுத்துறையில் இந்தியாவிலும் கனடாவிலும்
பல்லாண்டு காலம் பணிபுரிந்த முதிர்ந்த தமிழ்
அறிஞர் திரு.சி.செயபாரதன் அவர்கள்
கூடங்குளம் உலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி
குறிப்பிடுகையில் அது கடல்மட்டத்தில் இருந்து 25 அடி
உயரத்தில் முன்னேற்பாடாகச் செய்யப்பட்டிருக்கிறது
என்று சொல்கிறார்.
http://jayabarathan.wordpress.com/kudangulam-reactor-safety/
இது பாதுகாப்பாகத் தோன்றலாம். ஆனால், சப்பானில்
அண்மையில் வந்த பேரலை 50 அடி உயரத்திற்கு
எழுந்தது. 3 மீட்டரில் இருந்து 10 மீட்டர் உயரம் வரை
பொதுவாக சுனாமி அலைகள் எழும். ஆனால்,
சப்பான் அலை 14 மீட்டர் (50 அடி) உயர்ந்தது.
இதைவிட, சப்பானில் 1993ல் ஒக்கைடோவில்
அடித்த சுனாமிப் பேரலையின் உயரமான அலை
32 மீட்டர் (100 அடி) எழுந்துள்ளது.
கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட சுனாமிப் பேரலைகளில்
ஆகப் பெரியது அலாசுகாவில் 1958ல் நிகழ்ந்தது.
அதன் உயரம் 524 மீட்டர் (1720 அடி) என
பதிவாகியிருக்கிறது.
http://geology.com/records/biggest-tsunami.shtml
இயற்கையின் சீற்றத்தினால் ஏற்படும் பேரலைகளின்
உயரத்தை முன்கூட்டி அளந்துவிட முடியாது. வந்தபின்
அளப்பதைத்தான் அறிவியல் செய்துவருகிறது.
அவ்வளவு ஏன்?
2004 சுனாமி பேரலைகளால் தமிழகமும் தமிழீமும்
பேரழிவைச் சந்தித்தன. அப்போது தமிழர் கடற்கரைகளில்
எழுந்த அலைகளின் உயரம் 10.4 மீட்டர் (35அடி).
அதன்பின்னர் கடற்கரைகள் அப்படியேதான் இருக்கின்றன.
மூழ்கிவிடவில்லை.
ஆனால், தமிழக வரலாற்றில்
"பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள"
என்று சிலப்பதிகாரம் சொல்லவில்லையா?
சிலப்பதிகார வரிகள், ஒரு மலையையே கடல்
விழுங்கியிருப்பதைக் கூறுவது நாம் அறிந்ததுதானே?
சோழர் தலைநகரமாக ஒரு காலத்தில் விளங்கிய
பூம்புகார் கடலுக்குள் மூழ்கி முகவரி இழக்கவில்லையா?
மாமல்லபுரம் மூழ்கிக் கிடப்பதை நாம் கண்டு
கொன்டுதானே இருக்கிறோம்?
கேரளத்திலே வஞ்சி மாநகரம் கடலில்
மூழ்கிப் போகவில்லையா?
1970களில் தனுசுகோடி கடலால் மூழ்கிப் போனதை
மறந்துவிட்டோமா?
இப்படித் தமிழகத்தின் கடலோரம் இயற்கைச் சீற்றத்தினால்
குறுகிப் போய்க் கொண்டிருப்பதை வரலாற்றிலும்,
நம் காலத்திலும் கண்டிருந்தும், போன நூற்றாண்டில்
1720 அடி உயர சுனாமி அலையை அலாசுகாவில்
பார்த்திருந்தும், 7 ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமியின்
கொடுமையை நாம் பட்டிருந்தும், வெறும் 25 அடி உயரத்தில்,
கடற்கரையோரத்தில் கட்டப்பட்டிருக்கும் கூடங்குளம்
உலை பாதுகாப்பற்றது என்று மறுப்பதில்
தமிழ் மக்களிடம் என்ன குறையை யார் காண முடியும்?
அணு அறிஞர் செயபாரதன் கூறுவது போல, சில
பாதுகாப்புக் கருவிகளை கூடங்குள உலையில்
நிறுவியிருக்கலாம். ஆனால், கால காலமாக
கடற்கரையை மூழ்கடிக்கும் அலைகளைப் பார்த்து
வரும் தமிழகத்தின் முன் இந்த அணு உலைகள்,
"நிறுவப்பட்டிருக்கும் அணுகுண்டாகத்" தெரிவதில்
வியப்பென்ன?
மிக அதிகமாக அணு உலைகளை நிறுவிவரும்
சீன நாடு, புகுசிமா விபத்திற்குப் பின்னர்
தற்போது நிறுவத்தில் இருக்கும் 7 உலைகளை
தற்காலிகமாகவேனும் நிறுத்தியிருக்கிறது. உலகில்
பல்வேறு நாடுகளும் அணு மின் உலைகளை
மீளாய்வுக்கு உட்படுத்துகின்றனர்.
அணுத்துறை அறிஞராக சி.செயபாரதன்,
அணு உலையை ஆதரித்தாலும், அவருக்கும் இருக்கும்
அச்சத்தினால்தான் அவர் அணு உலைகளை
"நாட்டுக்குத் தேவையான தீங்குகள்" என்று வருணிக்கிறார்.
அவருக்கும் கூடங்குள மறுப்பாளர்களுக்கும் இருக்கின்ற
ஒரே வேறுபாடு "நாட்டுக்குத் தேவையற்ற தீங்கு" என்பது
மறுப்பாளர் கருத்தாகவும், "நாட்டுக்குத் தேவையான தீங்கு"
என்பது அணு அறிஞர் செயபாரதனொடு அவரைப் போன்ற
ஆதரவாளர்களின் கருத்தாகவும் இருக்கிறது.
ஆக, யாருமே இதனை "நல்லது" என்று சொல்லவில்லை.
மாறாக "தீங்கு" என்றே சொல்கிறார்கள்.
அமெரிக்காவில், 104 உலைகள் உள்ளன. 77% அமெரிக்க மக்கள்
1977ல் அணு உலை ஆதரவாளராக இருந்துள்ளனர் என்றும்
திரிமைல் விபத்து, செர்னோபில் விபத்து, புகுசிமா விபத்து
ஆகியவற்றிற்குப் பின்னர் அமெரிக்கர்களின் அணு உலை
ஆதரவு என்பது மிகக் குறைந்து 43% ஆகி விட்டது
என்று திரு.செயபாரதன் கூறுவது கவனிக்கத் தக்கது.
http://jayabarathan.wordpress.com/2011/10/18/nuclear-power-status-2011/
அது மட்டுமல்ல, அணு உலைகளையும் அணுவியலையும்
முழுமையாக ஆதரிக்கும் செயபாரதன் அவர்களே,
"இந்த அணு உலைகள் பூமிக்கடியிலே, பாதாளத்திலேதான்
கட்டப்படவேண்டும்; அதுவே சிறந்த பாதுகாப்பு" என்று
கூறுகிறார்.
http://jayabarathan.wordpress.com/2011/10/05/world-nuclear-power-status/
"கரணம் தப்பினால் மரணம்" என்ற அறிவியலின்
அணு உலைகளை தமிழத்தில் அமைப்பதை
முழுமையாக நிறுத்த வேண்டும்.
நமது கடற்கரைகள் வரலாற்றுக் காலந்தொட்டு
பேரலைகளுக்கும் இயற்கை சீற்றங்களுக்கும்
உட்பட்ட பகுதியாகும்.
இதை மறுத்து செய்யப்படும் கூடங்குள முயற்சி
தமிழ் மக்களின் வாழ்வுக்குப் பொருத்தப்படும்
"2000 மெகாவாட் அணுகுண்டன்றி வேறல்ல".
1977ல் அணு உலைகளை ஆதரித்த அமெரிக்கர்கள்
இன்று அதனைக் கண்டு அச்சப்படுகிறார்கள்.
1988ல் அணு உலையைப் பற்றிக் கவலை கொண்டிராத,
அல்லது அறியாதிருந்த தமிழர்கள் இன்று
மறுத்தெழுந்திருக்கிறார்கள்.
"அஞ்சுவது அஞ்சாமை பேதைமை" அன்றோ?
இப்பொழுது கட்டிவிட்டார்களே என்ன செய்யலாம்?
தமிழகம் நெற்களஞ்சியம்தானே!
தென்னைமர உயர அண்டாக்களையும்
கும்பாக்களையும் கட்டியிருக்கும் கூடங்குள அணு உலையை
உலகத்திலேயே ஆகப்பெரிய அரிசி ஆலையாக மாற்றலாம்.
அதைத்தவிர வேறேதும் செய்ய முடியுமா என்பதை
அப்துல்கலாம், செயபாரதன் போன்ற தமிழக அறிவியல்
அறிஞர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுத்தலாம்.
அணு மின்சாரத்திற்கு மாற்று பற்றியும் பிறவற்றையும்
தொடர்ச்சியில் காணுவோம்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
திங்கள், ஏப்ரல் 02, 2012
கூடன்குளம் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் விடுவிப்பு
மின்பற்றாக்குறை => மாற்றுச் சிந்தனை + மாற்று எரிபொருள்
மின்பற்றாக்குறை => மாற்றுச் சிந்தனை + மாற்று எரிபொருள்


காதலி சொல்லில் தோன்றும் உயர் மதம் மற்றும்
உன் அருளில் தோன்றும் அறநெறி எல்லாம்
பொருளில் தோன்றிவிடும்
மின்பற்றாக்குறை => மாற்றுச் சிந்தனை + மாற்று எரிபொருள்
மின்பற்றாக்குறை => மாற்றுச் சிந்தனை + மாற்று எரிபொருள்


காதலி சொல்லில் தோன்றும் உயர் மதம் மற்றும்
உன் அருளில் தோன்றும் அறநெறி எல்லாம்
பொருளில் தோன்றிவிடும்
மின்பற்றாக்குறை => மாற்றுச் சிந்தனை + மாற்று எரிபொருள்
மின்பற்றாக்குறை => மாற்றுச் சிந்தனை + மாற்று எரிபொருள்


காதலி சொல்லில் தோன்றும் உயர் மதம் மற்றும்
உன் அருளில் தோன்றும் அறநெறி எல்லாம்
பொருளில் தோன்றிவிடும்