வியாழன், ஏப்ரல் 28, 2011

ஏக்கம் தீர்க்குமா தாதம்பாளையம் ஏரி - மனோகரன்






நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்றி அமையாது ஒழுக்கு -
என்ற குறளுக்கொப்ப தமிழக மக்களின் வாழ்க்கையிலும் , வரலாற்றிலும் குளங்களும் , ஏரிகளும் பிரிக்க முடியாத அளவிற்கு பின்னிப் பிணைந்து கிடக்கின்றன . எனவேதான் குளம், ஏரி ஊர் பெயருக்கு முன்னாலோ , பின்னாலோ சேர்ந்திருக்கின்றன . தாதம்பாளையம் குளத்திற்கு அருகில் இருக்கும் ஊர் என்பதால் குளதூர்பட்டி என்று பெயர் வைத்துள்ளனர் . இதிலிருந்து இந்த குளத்தின் பெருமையை அறியலாம் .
கரூர் மாவட்டம் , அரவக்குறிச்சி வட்டம் , பரமத்தி ஒன்றியம் பவித்திரம் ஊராட்சியில் அமைந்துள்ளது தாதம்பாளையம் குளம் , பரமத்தி ஒன்றியம் அமராவதி ஆற்றின் வடபகுதியில் அமைந்து இருந்தாலும் மிகுந்த வரட்சியான பகுதியாகும் . இங்கு ஆண்டுக்கு சுமார் 200 முதல் 300 மி .மீட்டர் மழை பெய்கிறது . இந்த மழையும் , மழைகாலம் நவம்பர் , டிசெம்பர் மாதங்களில் பெய்கிறது . அவ்வாறு பெய்கின்ற மழைநீர் பரமத்தி , ஆரியூர் வழியாக உப்பாறு என்ற பெயரில் தாதம்பாளயதிற்கு கிழக்கே அமராவதியில் கலந்து வந்தன . இதை அறிந்த ஆங்கிலேய அரசு 1881 ஆம் ஆண்டு பெரிய அணைக்கட்டு போன்று குளத்தை வடிவமைத்து நீர்போக்கி அமைத்து முறைபடுதினார்கள் . இதன் பரப்பளவு சுமார் 420 ஏக்கர் ஆகும் . இந்த குளம் நீர்த்தேக்கத்தில் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் பஞ்சத்தை போக்கின . பள்ளபாளையம் ராச வாய்க்கால் வறட்சியான நேரத்தில் உயிர்த்தண்ணீர் பெற்றன. இந்திய விடுதலைக்கு பின்னர் இக்குளம் பராமரிப்பு இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக தூர்ந்து போய்விட்டது . 1990 குப் பின் பொதுபணிதுறைஇடம் இருந்து வனத்துறைக்கு கைமாறியது .
நம் முன்னேற்றத்திற்கும் உணவு உற்பத்திக்கும் , தொழில் வளர்சிக்கும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு உன்னதமான திட்டம் திராவிட ஆட்சியாளர்களால் பயனற்று கிடப்பதை கண்டு நமது விவசாய சங்க தலைவர்கள் , ஊராட்சிமன்ற தலைவர்கள் , பொதுமக்களும் பல்வேறு முயற்சிகள் எடுத்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கடந்த 20 ஆண்டுகளாக போராடி வருகின்றனர் . அதன் ஒரு பயனாக திரு . புளியம்பட்டி ராமசாமி , மொச்சகொட்டம்பாளையம் மனோகரன் போன்றவர்கள் எடுத்த கடும் முயற்சியினால் கடந்த 2002 ஆம் ஆண்டு பொதுபணிதுறை பொறியாளர் திரு . கண்ணப்பன் அவர்கள் தாதம்பாளையம் குளத்திற்கு அமராவதி ஆற்றின் வெள்ளஉபரி நீரை கொண்டு வந்தால் இப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்ற நோக்கத்தில் ருபாய் 12 கோடி மதிப்பீட்டில் மேற்கே நஞ்சைத் தலையூரிளிருந்து அமராவதி நீரை தாதம்பாளையம் குளத்திற்கு கொண்டு கொண்டு வரலாம் என்று ஒரு திட்டத்தை தயார் செய்து கொடுத்தார் . ஆனால் ஆண்டுகள் மட்டுமே போனது திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது . அடுத்து வருகின்ற ஆட்சியாளர்களாவது இந்த குளத்தை வனதுறையிடமிருந்து மீட்டு மக்களுக்கு பயனளிக்க செய்வார்களா ? என்பதுதான் தொக்கி நிற்கும் கேள்வி .
கரூர் நகரம் முழுவதும் பயனளிக்க இருக்கும் இந்த குளத்தின் தற்போதுள்ள நிலையை படத்தில் காணுங்கள் .

இத்திட்டம் நிறைவேறினால் ஏற்படும் நன்மைகள் :
1. 13 ஆண்டுகள் வெள்ள நீர் மற்றும் உபரிநீர் காவிரியில் எவ்வளவு கலந்தது என்பதை ஆய்வு செய்த பின்பே இத்திட்டம் தயாரிக்கப்பட்டது .
2. பரமத்தி ஒன்றியம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியும் .
3. கரூர் நகரம் ஆண்டாங்கோயில் மேற்கு கிழக்கு பகுதி , கருப்பம்பாளையம், கொடையூர், அப்பிபாளையம் ஊராட்சி பகுதிக்கு குடிநீர் ஆண்டு முழுவதும் கொடுக்க முடியும் .
4. பள்ளபாளையம் ராச வாய்க்கால் பாசனம் இரண்டு போகத்திற்கு வாய்ப்பு.
5. விவசாயம் செழிக்கும் , நிலத்தடி நீர்மட்டம் உயரும் , கால்நடைகளாலும் பெரிய பயன் உண்டாகும் .

ஒளிப்படம் : அரசு , முருகானந்தம்

ஞாயிறு, ஏப்ரல் 24, 2011

பெரியார் ?

வரலாறு ஈவு இரக்கமற்றது . அது யாருக்காகவும் வளைந்து கொடுக்காது . உலகில் நிகழ்வன அனைத்தும் வரலாறாகி விடுவதில்லை . மக்களிடம் எது பதிவு செய்யபடுகிறதோ அவையே வரலாறாக பின்னாட்களில் படிக்கபடுகிறது . அது எந்தெந்த வகையில் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கிறது என்பது தக்க சான்றுகளை வைத்துதான் . அவ்வாறு மெய்பிக்கப்படும் போது உண்மை பலவேளைகளில் கசக்கத்தான் செய்யும் ! அதுவே நாம் மேற்கூறியவாறு ஈவு இரக்கமற்றதாகி விடுகிறது .
திராவிடத்தின் ஆணிவேர் அழுகத் தொடங்கியுள்ளது . இந்தியம் திராவிடம் இவ்விரண்டும் எவ்வாறெல்லாம் தமிழர்களின் உண்மை வரலாற்றை இருட்டடிப்பு செய்துள்ளது என்பதை அறிந்தவர்கள் கூட வெளிபடையாக கூறுவதில்லை , எழுதுவதில்லை , ஏனெனில் அவர்கள் திராவிடத் தமிழ் தேசியவாதிகள் !
இந்தியத்தை பற்றி நாம் பயில்வது வடக்கேயிருந்து துவங்கும் வரலாற்றை மட்டும்தான் . உண்மையில் இந்தியாவின் வராலாறு தெற்கேயிருந்துதான் எழுதப் பட்டிருக்க வேண்டும் . அவ்வாறு எழுதபட்டால் தமிழன் உயர்வு பெற்று விடுவான் . வடவர்களின் வரலாறு பின்னுக்கு தள்ளப்பட்டு விடும் . தில்லியும் தலைமையிடமாக இருந்திருக்காது ! தமிழகமும் எதற்கெடுத்தாலும் தில்லியிடம் மண்டியிட வேண்டிய அவசியம் இருந்திருக்காது . ஆயினும் இன்று இந்தியாவை பற்றிய மாயை தமிழர்களிடம் மெல்ல மறைந்து வருகிறது என்பது மறைக்க முடியாத உண்மை .
திராவிடம் என்றவுடன் நினைவுக்கு வருபவர் பெரியார் என்று அழைக்கப்படும் ராமசாமி நாயக்கர்தான் ! இந்தியா நோக்கி வந்த அயலவர்கள் தமிழர்களையும் , கன்னடர்களையும் , தெலுங்கர்களையும் , மலையாளிகளையும் ஒரே இனமாக கருதி திராவிடர்கள் என்று அழைத்ததின் பிழையாக ஈ.வே .ரா . திராவிடத்தை பற்றிக் கொண்டார்! அதனால் நாம் இழந்தது கொஞ்ச நஞ்சமல்ல . அதன் துயரத்தை இன்று வரை அனுபவிக்கிறோம்.
யார் இந்த ராமசாமி நாயக்கர் ? தமிழை காட்டு மிராண்டி மொழி எனவும் , தாய் மொழியின் மகத்துவத்தை அறிய ஒவ்வொரு தமிழ் தாயின் பாலையும் ஆய்வுக் கூடத்தில் ஆய்வு செய்தால் தெரியும் அதன் யோக்கியதை என்று அவமதித்தவர் தானே ! இதிகாசங்களும் புராணங்களும் இன்ன பிற தமிழ் இலக்கியங்களும் வேண்டாத குப்பைகள் என்றாரே அவர் .
உண்மையில் தமிழர்களின் வரலாற்றை அறிய தொன்மங்கள் தானே வழிகாட்டியாக இருக்கின்றன . இது தமிழ் அறிஞர்களுக்கும் , ஆய்வாளர்களுக்கும் தெரியாதா? எந்த விதத்திலும் தமிழன் தனித்து உயர்ந்துவிடக் கூடாது என்பதன் நோக்கம்தான் என்ன ? தமிழர் நாட்டை தமிழர் ஆள நினைப்பதில் என்ன பிழை ? அவர் சொல்கிறார் தமிழர்களுக்கு தலைவன் ஒருவரும் இல்லையாம் . யாரை முன்னேற விட்டார் இவர் . ஏமாளியாக இருந்த தமிழன் ஏற்றம் பெற கயவர்களும் , அயலவர்களும் ஒருபோதும் விரும்பியதில்லை . வளம் மிக்க தமிழகம் சுரண்டப் படுவது இவர் போன்றவர்களின் பிறங்கடைகளால் தானே !
ராமசாமி நாயக்கரின் சாதனைகளாக குறிப்பிடப்படும் அவரின் சிந்தனைகள் உண்மையில் அவருடையதா? அறிஞர் கைவல்ய சாமியாரின் எழுத்துகளும் , சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் கருத்துகளையும் அவர் தனது மேடை பேச்சுக்களில் விளக்கி சொன்னதால் தான் அவருக்கு பெருமை . அதனால் அவரை பின்பற்றுபவர்கள் மட்டுமே புரட்சியாளர் என்கின்றனர் .
இதை பாரதி தாசன் தெளிவாக்குகின்றார். பெரியார் ஒரு சிந்தனையாளர் தான் புரட்சியாளர் அல்ல . புரட்சி என்பது தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்துவது . ஹோசிமின் ஒரு புரட்சியாளர் , மாவோ ஒரு புரட்சியாளர் , சிங்காரவேலரும் புரட்சியாளர் . இன்னமும் சொல்லபோனால் சிங்கரவேலரோடு புரட்சி செத்துவிட்டது என்கிறார்.
அதேபோல் எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே , இங்கு பிறப்பினும் அயலான் அயலானே என்றும் சாடியது யாரை என்பதும் , அவரின் கூற்றில் இருக்கும் பல உண்மைகளை மறைக்க முடியாது என்பதும் அனைவரும் அறிவர் . ராமசாமி நாயக்கருக்கு சில நல்ல குணங்கள் உண்டு . அதேபோல் பல தீய குணங்களும் உண்டு . தனக்கு தேவையான போது ஒருவனை உச்சி முதல் உள்ளங்கால் வரை வைத்து பயன் படுத்திக் கொள்வார் . தனக்கு தேவையில்லாத போது என்னதான் அவன் பயன்பட்ட மனிதன் என்றாலும் அவன் இறந்து கொண்டிருக்கும் தருவாயிலும் கூட சட்டை செய்ய மாட்டார் . அப்படி அவரால் உதாசீன படுதியவர்களில் ஒருவர்தான் சிந்தனை சிற்பி மா. சிங்காரவேலர் !
1934 குப் பின் ராமசாமி நாயக்கருக்கு பல நெருக்கடிகள் வந்தன . போது உடமை இயக்கம் தடுக்கபட்டிருந்த காலம் அது. நாயக்கரின் உடன் இருந்தவர்கள் அனைவரும் இதெல்லாம் சிங்கரவேலரால் வந்த தொல்லைகள் என்றனர் . உடனே நாயக்கரும் இனி நான் பொது உடமை பற்றி பேசமாட்டேன் என்று கூறிவிட்டு சந்தர்பவாத சுயநலத்திற்காக நீதி கட்சியை ஆதரித்தார் . சுயமரியாதை சமதர்ம கப்பலை அம்பேல் என விட்டுவிட்டு நீதிக்கட்சி எனும் சிறு படகில் சாதாரண படகோட்டியாக போகும் அவலம் ஏற்பட்டது . மேலும் சிங்கரவேலரின் கட்டுரைகள் குடியரசில் மிகுதியாக வந்துகொண்டிருந்த காலம் . நெருக்கடிக்குப் பின் படிப்படியாக குறைக்கப்பட்டு பின்னர் வாய்ப்பே இல்லாது போனது .
நாயக்கர் தன்னை பற்றியே நினைத்து தன்னை சுற்றியே உலகத்தை அமைத்துக்கொண்டு வாழ்ந்த அவர் பண்பில்லாதவர் . காரணம் அவர் தான் முனைப்பானவர் தனக்கு தேவை ஏற்படின் கூட்டையே அழித்துக்கொண்டு வெளியேறும் பட்டுபூச்சி போன்றவர் . 1930 களில் தனது சுயமரியாதை இயக்கத்தை அரசியலற்ற இயக்கமாக நடத்த வேண்டும் என அடம்பிடித்தார். மீண்டும் 1934 இல் நெருக்கடி வந்தபோது தன்னை காப்பாற்றி கொள்ள மீண்டும் அரசியலற்ற சமுதயபணிதான் நோக்கமென்று கூறினார் . சிங்காரவேலர் பெரு முயற்சி செய்து சுயமரியாதை சமதர்ம இயக்கத்தை அரசியல் சமுக சீர்திருத்த இயக்கமாக மாற்றினார் . ஆனால் ராமசாமி நாயக்கர் வழக்கம்போல் என் இயக்கம் அரசியல் இயக்கமல்ல , சீர்திருத்த இயக்கம் தான் , எனக்கும் பொது உடமைக்கும் தொடர்பு இல்லை , என் இயக்கத்தில் இருப்பவர்கள் பொது உடமை பேசினால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது என்றார் . இதை கேட்ட சிங்காரவேலரும் தோழர் ப. ஜீவானந்தமும் பேரதிர்ச்சி அடைந்தனர் . மனம் நொந்த நிலையில் அவரை விட்டு வெளியேறினர் . அதனால் தான் அவரை பின்பற்றுபவர்களுக்கும் பண்பு இல்லாது போய்விட்டது !

சிந்திப்போம் .
நூல் அதரம் : செஞ்ஞாயிறும் வின்மீன்களும்.

தொகுப்பு : கருவை முருகு .

சிறிலங்காவின் இனப்படுகொலைகள் பற்றிய விசாரணையை கோரி நாடுகடந்த தமிழீழ அரசு கையெழுத்து பிரச்சாரம்




இந்த முயற்சியில் ஒவ்வொரு தமிழரையும் செயற்றிறனுடன் பங்குபற்றுமாறு நாடுகடந்த தமிழீழ அரசு கேட்டுக்கொள்கிறது. தமிழராக பிறந்த ஒரே காரணத்துக்காக கொல்லப்பட்டவர்களுக்கு நாம் செலுத்தும் ஒரு அஞ்சலியாக இது அமைகிறது.

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறும், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைக்குமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூனிடம் கோரி நாடுகடந்த தமிழீழ அரசு கையெழுத்து பிரச்சாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசின் அங்கத்தவர்கள் உலகெங்கும் உள்ள தமது தொகுதி மக்களிடம் மேற்படி கையெழுத்துக்களை சேகரிக்கவுள்ளனர்.


சிறிலங்காத்தீவில் நிலவும் பயம் தரும் சூழ்நிலை காரணமாக தமிழீழத்தில் வாழும் தமிழர்கள் தமது விருப்பங்களை சுதந்திரமாக வெளியிட முடியாத நிலையில் தமிழ்மக்களின் விருப்பங்களை வெளிப்படுத்தும் பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழர்களின் மீது விழுந்துள்ளது.


தமிழர் பகுதிகள் சிறிலங்கா இராணுவத்தினரால் நிரம்பியுள்ள நிலையில் படுகொலைகள், காணாமல் போதல், கடத்தல்கள், பாலியல் வல்லுறவுகள் போன்ற பாரிய மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்று வருகின்றன.

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைப்பதற்கும், சிறிலங்காவின் போர்க்குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்குமான தேவை குறித்த தமிழ் மக்களின் குரல் தெளிவாகவும் உரத்தும் .நா. செயலாளர் நாயகம் அவர்களுக்கு கேட்பதை உறுதிப்படுத்தும் கடமை புலம் பெயர்ந்த தமிழர்களினால் தெரிவுசெய்யப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளுக்கு உள்ளது.

.நா. அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் விசாரிக்க வேண்டியதன் நியாயத்தையும், சிறிலங்காவை விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கான நியாயத்தையும் தெளிவுபடுத்தும் நினனவுப்பத்திரம் ஒன்றில் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அவர்களுக்கு வழங்ககப்படும்.

போரின் இறுதிநாட்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டும், மக்கள் தொகையாக கொல்லப்பட்டும், பாலியல் வல்லுறவுகள் செய்யப்பட்டும், கட்டாயமாக காணாமல் போக செய்யப்பட்டும், பரந்தளவில் எறிகணைத்தாக்குதல்கள் செய்யப்பட்டும், உணவு மறுக்கப்பட்டும், மருந்துகள் மறுக்கப்பட்டும், செய்தியாளர்கள் பயமுறுத்தப்பட்டும் உள்ளதாக .நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழர்களை கொன்றததற்காகவும், பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதற்காகவும் சிறிலங்காவின் அரசதலைவர்களையும் இராணுவத்தினரையும் நீதியின் முன்னிறுத்துவதற்கான நாடுகடந்த தமிழீழ அரசின் முயற்சிகளின் தொடர்ச்சியே இந்த கையெழுத்து சேகரிப்பாகும். .நா. அறிக்கைக்கு எதிரான சிறிலங்காவின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நாடுகடந்த தமிழீழ அரசு நிபுணர்கள் குழுவொன்றை நியமித்துள்ளது. இந்த குழு பல்வேறு அரசுகளையும் சந்தித்து சிறிலங்காவின் .நா.வுக்கு எதிரான பிரச்சாரத்தை பற்றி விளக்கவுள்ளது. .நா. நிபுணர்கள் குழுவின் விசாரணையின் போது சிறிலங்கா பாரிய அளவில் தமிழ் பொதுமக்களை படுகொலை செய்தது பற்றி விளக்கமான அறிக்கையொன்றை நாடுகடந்த தமிழீழ அரசு சமர்ப்பித்து இருந்தது.

நன்றி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் .

ஞாயிறு, ஏப்ரல் 10, 2011

நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்ரகுமாரன் விடுத்துள்ள அறிக்கை:

Rudhrakumaran
Ads by Google
Sign Up For Orkut Now www.google.com/Orkut
Join Communities of Your Interest, Try out Cool Games & Apps and More!
வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில், ஈழத் தமிழரின் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி, ஈழத் தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ தமிழ்ச் சொந்தங்கள் வழிவகுக்க வேண்டும், என்று நாடுகடந்த தமிழீழ அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக, நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்ரகுமாரன் விடுத்துள்ள அறிக்கை:

"இது தமிழகத்தில் தேர்தல் காலம். தமிழகத்தை, தமிழக மக்களை யார் ஆளுகை செய்வது என்பதனை தமிழக மக்கள் தீர்மானிக்கும் நேரம். இந் நேரத்தில் உங்கள் தொப்புள்கொடி உறவுகளாக வாழும் ஈழத் தமிழ் மக்களாகிய நாங்கள் எமது இன்றைய நிலையினை உங்களின் கவனத்துக்கு எடுத்து வரவே இம் மடலை வரைகின்றோம். 'தானாட மறந்தாலும் தசையாட மறக்காது' என்பார்கள். உங்களைத் தவிர நமது மக்களின் சோகத்தையும் அவலத்தையும் நாம் யார்க்கெடுத்துரைப்போம்?

நேசத்துக்குரிய தமிழக மக்களே!

நாகரீக உலகை அதிரச் செய்த பெரும் இனப்படுகொலைக்கு ஈழத் தமிழ் மக்கள் ஆளாகியதை நீங்கள் நன்கறிவீர்கள். இந்த இனப்படுகொலையின் இறுதிக்கட்டத்தில் 80,000 க்கும் மேற்பட்ட நமது உறவுகள் கொத்துக் கொத்தாக நம் கண்முன்னாலேயே சிங்களத்தால் கொல்லப்பட்டார்கள். வீதிகளில், வீடுகளில், பள்ளிக்கூடங்களில், வழிபாட்டுத்தலங்களில், மருத்துவமனைகளில், திருமண வீடுகளில், இழவுச் சடங்குகளில் எங்கும் நமது மக்கள் துரத்தித் துரத்திக் கொல்லப்பட்டார்கள்.

நடக்கும்போது கொல்லப்பட்டார்கள். படிக்கும்போது கொல்லப்பட்டார்கள். உண்ணும்போது கொல்லப்பட்டார்கள். உறங்கும்போது போது கொல்லப்பட்டார்கள். கூடும்போதும் கொல்லப்பட்டார்கள். ஓடும் போதும் கொல்லப்பட்டார்கள். இயற்கை கழிக்கும் போதும் கொல்லப்பட்டார்கள். இயலாது இருக்கும் போதும் கொல்லப்பட்டார்கள். குப்பை கூளங்களைக் கூட்டித் தள்ளி ஒரு மூலைக்குள் வைத்துத் தீயிட்டுக் கொளுத்துவதைப்போல - மூட்டைப்பூச்சிகைள தட்டிக் கொட்டி ஒருங்கு சேர்த்து காலால் நசுக்குவதைப்போல - நமது மக்களை அடித்துத் கலைத்து விரட்டிச் சென்று கடற்கரையோரத்தில், ஒரு சிறிய நிலப்பகுதியில் வைத்து நரபலி எடுத்தது சிங்களம்.

அதுவும் 21 ஆம் நூற்றாண்டில், நவீன ஊடக உலகம் 24 மணிநேரமும் விழிமூடாது பார்த்திருக்கும் காலத்தில், உலகின் 600 கோடி மக்களின் கண்களின் முன்னால், இந்திய உபகண்டத்தில் தமிழகத்துக்கு அருகாமையில் இப் பெரும் இனப்படுகொலையில் இலட்சக்கணக்கில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாhடன இந்தியா வின் அண்டையில், ஜனநாயகப் பாரம்பரியம் கொண்ட 120 கோடி மக்களின் முன்னால் இக் கோரதாண்டவத்தை ஆட சிங்களத்தால் முடிந்திருக்கிறது.

இது இராணுவ உத்தியின் வெற்றி அல்ல. சிங்கள வீரத்தின் வெற்றியுமல்ல. இனப்படுகொலையின் வெற்றி. மக்களைத் தங்குதடையின்றி, மிகப் பெரும் தொகையில் கொன்று குவிக்க முடிந்தமையின் வெற்றி.

எந்த அரசு இந்த மக்களைத் தமது சொந்த மக்கள் என்று உரிமை கொண்டாடியதோ அந்த அரசே அந்த நிராயுதபாணியான மக்களை எறிகணைகளாலும், போர் விமானங்களாலும், யுத்த டாங்கிகளாலும் கொன்று குவித்துப் பெற்ற வெற்றி. இப்படியான அபகீர்த்தி உடைய ஒரு வெற்றியைத்தான் தமது வரலாற்றுப் பெரும் வெற்றியென மீசை முறுக்குகிறது சிங்களம்.

ராஜதந்திரம்?

ராணுவ அர்த்தத்தில் இது ஒரு கோழைத்தனம்; என்றாலும் கூட அரசியல் ராஜதந்திர அர்த்தத்தில் சிங்களம் வெற்றி பெற்றிருக்கிறது. உண்மையில் முள்ளிவாய்க்காலில் வெற்றியடைந்தது சிங்களமும் சீனாவும்தான்.

தோல்வியடைந்தது இந்தியாவும் ஈழத் தமிழர்களும். தொப்புள் கொடி உறவுகளான இந்திய மக்களையும் ஈழத் தமிழர்களையும் பிரிப்பதில் சிங்களத் தலைவர்களும் ராஜதந்திரிகளும் வெற்றி பெற்றுள்ளனர். இது நம்மிரு தரப்பினருக்கும் பெரும் இழப்பாகும். இந்த இழப்புக்கள் நடந்து முடிந்தவை மட்டுமல்ல, எமது உறவு ஒட்டப்படாவிட்டால் இனியும் தொடர்ந்து நடக்கக் கூடியவையும்கூட.

இனி இந்த உறவை ஒட்டப்போவது யார் என்பதே இப்போதய கேள்வி. இப் பணி முதலில் தமிழக மக்களையும் அடுத்து இந்திய மக்களையும் தலைவர்களையும் ராஜதந்திரிகளையும் சாரும். இதற்கான தொடக்கப் புள்ளியாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுக்கும் இவ் வேண்டுதலை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர்...

கடந்த காலத்தை ஒரு தடவை திருப்பிப் பார்ப்போம். இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி கொல்லப்பட்டபோது ஈழத் தமிழர் தேசம் பெருந்துயரில் ஆழ்ந்து போனது. மக்கள் தாமாகவே வீடுகளெங்கும், வீதிகளெங்கும் கறுப்புக் கொடிகளும் கண்ணீருமாக தமது வணக்கத்தை செலுத்தி நின்றார்கள்.

இதேபோல் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோரின் மறைவின் போதும் ஈழத் தமிழர் தேசமே பெருந்துயரில் தோய்ந்து போனது. காந்தி, நேரு போன்ற இந்தியப் பெரும் தலைவர்களின் படங்கள் ஈழத் தமிழர் வீடுகளில் மாட்டப்பட்டிருந்த காலம் நம் கண் முன்னாலேயே இருந்தது. இப்படியாக இந்திய மக்களுக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கும் இடையே பாரம்பரிய நட்புறவு இருந்து வந்தமையினை நாமெல்லோரும் அறிவோம்.

இத்தகையதொரு உறவில் விரிசல் வந்தமை தற்செயலானதல்ல. சிங்கள இராஜதந்திரத்தின் வலைக்குள் இந்தியாவும் ஈழத்தமிழர்களும் சிக்குண்டு பாரிய தோல்விக்கும் பெருந்துயருக்கும் உள்ளாகியிருக்கிறோம். இந்த ராஜதந்திர வலைக்குள் இரு தரப்பினரையும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாதான் இழுத்து வீழ்த்தி சிக்க வைத்தார் என்பது ஒரு கசப்பான வரலாற்றுப் பேருண்மையாகும்.

'நான் பெரும்பாவி..'

2400 ஆண்டுக்கு மேலாக சாணக்கிய இராஜதந்திர பாரம்பரியம் கொண்ட இந்திய ராஜதந்திரமும், தொன்மையும் செழிப்பும் மிக்க தமிழ் நாகரிகமும் இங்கு தோல்வி கண்டன. இதனை இலங்கைக்கான முன்னாள் இந்தியத் தூதர் டிக்சித் தனது 'Assignment Colombo' எனும் நூலில் ஒப்புக் கொள்கிறார்.

ஜே. ஆர் தம்மை ஏமாற்றிவிட்டார் எனக் கூறும் டிக்சித், பைபிளில் வரும் 'நான் பெரும்பாவி' எனும் அர்த்தத்தைத் தரக்கூடிய லத்தின் சொல்லாகிய 'Mea culpa' எனும் பாவமன்னிப்புக் கோரும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைப் பயன்படுத்தி மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் தமது தோல்வியை ஒப்புக்கொள்கிறார்.

இதுவே பிற்காலத்தில் நம் இரு தரப்புகளும் கண்ட தோல்விகளுக்கு அடிப்படையானதாக அமைந்தது.

சிங்களத்தின் இந்திய எதிர்ப்பு

இது மட்டுமன்றி, சிங்களம் இந்தியாவை எப்போதும் தனக்கு அச்சுறுத்தலாகத்தான் நோக்குகிறது. தமிழர்களை இந்திய விரிவாக்கத்தின் குறியீடாகத்தான் பார்க்கிறது. இந்தியாவிலிருந்து காலத்துக்கு காலம் படையடுப்புகளும் பண்பாட்டு விரிவாக்கமும் ஏற்பட்டு வந்த பின்னணியில் சிங்களவர்களிடம் இந்திய எதிர்ப்புவாதம் ஆழமாக வேரூன்றியுள்ளது.

இந் நிலையில் தமிழர்களை இந்திய ஆதிக்க விஸ்தரிப்பின் கருவிகளாக நோக்கும் மனநிலையினை சிங்களவர்கள் கொண்டுள்ளனர்.

இத்தகைய பண்டைய சிந்தனையைக் கொண்ட மகாவம்ச இதிகாச மயக்கத்தினுள் சிங்களம் தோய்ந்து போயுள்ளது. இம் மனப்பாங்கைக் கொண்ட சிங்கள இனம் தமிழர்களுக்கு எதிராகத் தொடுத்த போரை உண்மையில் தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் எதிராக நடாத்திய போராக தமிழ் ஆய்வாளர்கள் வர்ணிக்கின்றனர். ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்ட தமிழ் மக்கள் இந்தியாவின் பெயராலேயே சிங்கள ஆட்சியாளர்களால் கொன்று குவிக்கப்பட்டும் சிறுமைப்படுத்தப்பட்டும் வருகின்றனர் என்ற கருத்து ஆழ்ந்து நோக்கப்பட வேண்டியதொன்று.

ராணுவத்தினரின் போக பூமி... தமிழரின் நரக பூமி!

இன்று ஈழத்தமிழ் மண் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட பகுதியாகவே உள்ளது. அது இராணுவத்தினருக்குப் போக பூமியாகவும் தமிழ் மக்களுக்கு நரக பூமியாகவுமே காட்சியளிக்கிறது. இராணுவத்தினர், கடற்படையினர், காவற்துறையினர், துணைப்படையினர் எனத் தமிழ் மண்ணில் நிலை கொண்டுள்ள ஆயுதப் படையினரின் தொகையை மொத்தத் தமிழ் குடும்பங்களின் தொகையால் வகுத்தால் ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆயுதப்படையினன் என்ற வீதத்தில் ஈழத் தமிழ்மண் மொத்த இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்ற உண்மை பச்சையாகப் புலப்படும்.

எந்நேரத்திலும் இராணுவத்தால் மக்கள் இம்சைப்படுத்தக் கூடிய வகையிலான இராணுவ ஆட்சியே அங்கு நிலவுகிறது. இன்னும் சில வருடங்கள் தாமதித்தால் இலங்கைத்தீவில் முழுத் தமிழ் மண்ணும் சிங்களமயப்பட்டு விடும் ஆபத்து துல்லியமாக உள்ளது. அவ்வாறு ஈழத் தமிழ் மண் சிங்களமயமாகி விட்டால் இலங்கைத்தீவு முழுமையாக தமிழக, இந்திய எதிரி நாடுகளின் கொல்லைப்புறமாக மாறிவிடும் ஆபத்தும் அதேயளவு துல்லியமானதாக உள்ளது.

அன்புக்குரியவர்களே! உலகில் ஒரு மக்கள் கூட்டம் சுதந்திரமாக வாழ்வதா அல்லது அடிமைகளாக வாழ்வதா என்பதை உள்நாட்டு நிலைமைகள் மட்டும் தீர்மானிப்பதில்லை. உலக அரசுகள் அதுவும் சக்தி மிக்க அரசுகள் ஒரு பிரச்சினையில் எடுக்கும் முடிவுகள் ஒரு மக்கள் கூட்டத்தின் எதிர்காலத்தை தீர்மானித்து விடுகின்றன.

ஈழத் தமிழ் மக்களாகிய நாம் இன்று சிங்களத்திடம் தோல்வியடைந்து சிறுமைப்படுவதற்கும் உலக அரசுகள் எடுத்த முடிவுகளே முக்கிய காரணம். இது ஈழத் தழிழ் மக்களின் தோல்வி மட்டுமல்ல தமிழக மக்களின் தோல்வியும் கூடத்தான் என்பதனையும் உங்களின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறோம்.

இதனால் இந்நிலையினை மாற்றியமைத்து இந்தியா உட்பட உலக அரசுகளின் ஆதரவினை நமது பக்கம் வென்றெடுப்பதனைத் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அடுத்த கட்டத்தில் முக்கியமானது என நாம் கருதுகிறோம்.

அதேவேளை சுயநலன்கள் என்ற அச்சில் சுழலும் இன்றைய உலக ஒழுங்கில் நியாய தர்மங்களை விட உலக அரசுகளின் நலன்களே வரலாற்றுச் சக்கரத்தைச் சுழற்றிக் கொண்டிருக்கின்றன என்பதனையும் நாம் நன்கு அறிவோம்.

உலக அரசுகளை நம் பக்கம் வென்றெடுப்பதற்கு தமிழக மக்களின் முதன்மைப் பாத்திரம் இன்றியமையாதது என்பதனை நாம் நன்கு உணர்ந்துள்ளோம். இதேவேளை உள்நாட்டு நிலைமைகள் ஒரு அரசின் வெளிநாட்டுக் கொள்கையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதனையும் நாம் கவனத்திற் கொண்டுள்ளோம்.

சுதந்திர தமிழீழம் ஒன்றே தீர்வு

இத்தகைய ஒரு சூழலில் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் தமிழகத்துக்கு மிக முக்கிமான பங்கு உண்டு. ஈழத் தமிழர் தேசத்தை விழுங்கி விடத் துடிக்கும் சிங்கள இனவாதப் பூதத்திடம் இருந்து நமது மக்களைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பும் தமிழக மக்களிடத்தில், தமிழக அரசியற் தலைவர்களிடம் உள்ளது என்பதனயும் தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.

சுதந்திரத் தமிழீழம் என்ற தனியரசு இலங்கைத் தீவில் அமைக்கப்படுவதே ஈழத் தமிழ், தமிழக, மற்றும் இந்திய மக்களது நலன்களை ஒரேநேர்கோட்டில் சந்திக்க வைக்கக் கூடியது என்பதனையும் உறுதியாக வெளிப்படுத்த விரும்புகிறோம்.

இத்தகையதொரு வரலாற்றுச் சூழலில், இன்றைய தேர்தல் காலத்தில் நாம் சில வேண்டுதல்களை முன் வைக்கிறோம். எம்மால் முன்வைக்கப்பட்டிருக்கும் பின்வரும் கோரிக்கைகளுக்கு தமிழகக் கட்சிகளும் மக்களும் ஆதரவு வழங்க வேண்டுமென மனதார வேண்டிக் கொள்கிறோம்.

1. ஈழத் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தமிழீழத் தனியரசே தீர்வாக அமைய முடியும் என்பதனை வலியுறுத்தியும் தமிழீழத் தனியரசினை அங்கீகரித்தும் தற்போதய தேர்தலில் தெரிவு செய்யப்படும் தமிழக சட்டசபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றச் செய்தல்.

2. இலங்கை அரசின் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான இனப் படுகொலை, போர்க் குற்றங்கள், மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்களை அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்குமாறு இந்திய அரசினை வலியுறுத்தும் வகையில் தமிழகச் சட்டசபையில் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றச் செய்தல்.

3. சுதந்திரத் தமிழீழ அரசினை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழக மக்களின் சார்பில் இந்திய அரசிடம் முன்வைத்து அதனை வென்றெடுப்பதற்காகச் செயற்படல்.

4. தமிழகத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ள ஈழத் தமிழ் மக்களின் கௌரவமானதும் பாதுகாப்பானதுமான வாழ்வு உறுதிப்படுத்தப்படுவதுடன் இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ள திபெத் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும் ஈழத் தமிழ் மக்களுக்கும் வழங்கப்படுவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளல்.

5. தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபடுத்தி தமிழக மற்றும் இந்தியச் சிறைக் கூடங்களிலும் சிறப்பு முகாம்களிலும் தடுத்து வைத்திருக்கப்படும் தமிழர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதற்கு மாநில, மத்திய அரசுகளைத் தூண்டுதல்.

6. போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் மக்களின் வாழ்க்கை மீளக் கட்டியெழுப்பப்படுவதற்குத் தேவையான உதவிகள் மக்களை நேரடியாகச் சென்றடைவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசின் ஊடாகவும் மற்றும் ஏனைய அனைத்துலக நிறுவனங்கள் ஊடாகவும் முன்னெடுத்தல்.

துயர் தோய்ந்த எமது ஈழத் தமிழர் பிரச்சினையினை தேர்தல் களத்தில் முதன்மைப்படுத்துவதன் மூலம் ஈழத் தமிழர்களின் பாதுகாப்பான கௌரவமான வாழ்வுக்கு தோள்கொடுப்பீர்கள் என்ற மேலான நம்பிக்கையுடன் தங்களின் மேலான கவனத்துக்கு இதனைப் பணிவுடன் சமர்ப்பிக்கின்றோம்.

-இவ்வாறு ருத்திரகுமாரன் கூறியுள்ளார்.
நன்றி : தட்ஸ் தமிழ் .காம்

சனி, ஏப்ரல் 09, 2011

திராவிடம் பிக்சர்ஸ் வழங்கும் "தமிழ்ப் பிச்சைக்காரன்"


பள்ளிப் பருவத்தில் இலவசப் பகல் உணவு எனக்கு ஒரு மிகப்பெரிய சுமையாகவும் வெட்கமாகவும் இருந்தது, அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலுமினியத் தட்டுகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு வரிசையில் நின்று இலவசமாக வழங்கப்படும் பகல் உணவை பெற்றுக் கொண்டு "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" என்கிற வள்ளுவப் பெருந்தகையின் குறளை அனைவரும் சொல்லி முடித்த பிறகு சாப்பிட வேண்டும். அப்போது வீடுகளில் இருந்து உணவைக் கொண்டு வந்து சாப்பிடும் நண்பர்கள் பணக்காரர்கள் என்றும் இலவசப் பகல் உணவு சாப்பிடுபவர்கள் ஏழைகள் என்றும் ஒரு கற்பிதம் நிலவிக் கொண்டிருந்தது, இரு குழுவும் எப்போதும் ஒன்றை ஒன்று விலகியே இருக்கும், இந்த ஏழை பணக்காரர் பேதம் என் மனதிலும் குடி கொண்டு அரிக்கத் துவங்கியதே நான் வெட்கம் அடைந்ததற்கான காரணம். பலமுறை கெஞ்சிப் பார்த்தும் தந்தையார் மிகப் பிடிவாதமாக நான் எல்லாக் குழந்தைகளோடும் அமர்ந்து இலவசப் பகல் உணவையே சாப்பிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். காலம் மிகச் சரியாக இலவசப் பகல் உணவின் அருமையை அதன் தேவையை எனக்கு உணர்த்தியது. தந்தையை இழந்த, அதிகாலையில் எழுந்து வேலைக்குச் செல்லும் தாயுடன் வாழ்க்கையை எதிர் கொண்ட ஒரு நண்பனைச் சந்திக்கும் வரையில் அதன் மேன்மை எனக்குப் புரியவில்லை. காலையில் உணவு உட்கொள்ளாமல் அந்தப் பகல் உணவின் நேரத்துக்காக அந்த நண்பன் காத்திருப்பான், உடைக்கப்பட்ட தண்டவாளக் கம்பியில் இருந்து கிளம்பி வரும் மணியோசை எங்களில் பலரை அடையும் முன்னரே அந்த நண்பனை அடைந்து விடும், அவன் உணவுக்குத் தயாராகி விடுவான். இரவுப் பசி அவனை ஆட்கொள்ளும் வரையில் தேவைப்படும் உணவை அவன் சாப்பிடுவான். பிறகு அவனோடு சேர்ந்து பத்தாம் வகுப்பு வரை எந்த வெட்கமும் இன்றி நான் எனது உணவு வேளைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன், அவனது பசியில் ஒரு மகத்தான மனிதரின் முகம் எளிமையாய் சிரித்துக் கொண்டிருக்கும், அந்த மனிதரின் பெயர் காமராஜர், ஆம், இந்தியா மாதிரியான வளரும் ஏழை நாடுகளுக்குக் காமராஜர் போன்றவர்கள் அரிதான தலைவர்களாக இருந்தார்கள், அந்த அரிய மனிதரையும் ஒரு குறிப்பிட்ட சாதி முகமூடி அணிவித்து பின்வந்த காலங்களில் தமிழர்களாகிய நாம் குறுகிப் போனோம். இன்றைக்கு இலவசங்கள் என்று சொன்னவுடன் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் ஒரு மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு, ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகள், ஆடுகள், மாடுகள், வீடு, நிலம் என்று ஏறத்தாழ ஒரு மாநிலத்தின் மக்கள் அனைவரையும் இலவசங்களை அடையக் காத்திருக்கும் பிச்சைக்காரர்களாக மாற்றிய சாதனையை திராவிடக் கட்சிகளின் இன்றைய தந்தையும், தாயும் செய்து முடித்திருக்கிறார்கள், காமராஜரின் இலவசப் பகல் உணவுத் திட்டம் எப்படி ஒரு கனவுத் திட்டமாக இருந்ததோ, எப்படி ஒரு எதிர்காலத்தை நோக்கிய கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாக இருந்ததோ, அதற்கு நேர் மாறாக இன்றைய அரசுகளின் இலவச அரிசி, இலவசத் தொலைக்காட்சி போன்ற வாக்கு வங்கித் திட்டங்கள் காட்சி அளிக்கத் துவங்கி இருக்கின்றன. முதலில் நாம் ஒரு செய்தியைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும், எந்த அரசியல் கட்சியும் அல்லது ஆட்சியாளரும் இலவசத் திட்டங்களைத் தங்களின் கட்சி நிதியில் இருந்தோ, சொந்தப் பணத்தில் இருந்தோ வழங்கவில்லை, உழைக்கும் மக்களின் குருதியில் இருந்து பெறப்படும் வரிப்பணத்தில் தான் இத்தகைய திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன, ஆகவே மக்களின் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்படும் எந்த ஒரு திட்டமும் பொருளும் இலவசம் என்று சொல்ல முடியாது. இலவசங்கள் என்று சொல்ல முடியாத ஒன்றை நாம் ஏன் எதிர்க்க வேண்டும் என்று கேள்வி இப்போது உங்களுக்கு வந்திருக்க வேண்டும். அப்படியென்றால் பொருளாதாரத்தையும் அதன் உள்ளடக்கத்தையும் புரிந்து கொள்ளக் கூடிய கூர்மையான அறிவு உங்களுக்கு உண்டென்று பொருள். நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். குடியாட்சித் தத்துவத்தைக் கொள்கையாகக் கொண்டிருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு சமூகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல என்ன செய்ய வேண்டும்? அந்த சமூகத்தின் மக்களுக்கு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும், அந்த சமூக மக்களின் வரிப்பணத்தை முறையாகச் செலவு செய்ய வேண்டும், அந்தச் சமூக மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்ய வேண்டும், கல்வியைத் தங்கு தடையின்றி வழங்கி அதன் மூலமான விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும், மருத்துவ வசதிகளைப் பெருக்கி நோயற்ற சமூகத்தைக் கட்டமைக்க வேண்டும், குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை மற்றும் போக்குவரத்து வசதிகளைப் பெருக்கி அந்தச் சமூகத்தின் அடிப்படைக் கட்டுமானங்களைத் தன்னிறைவு கொள்ளப் பாடுபட வேண்டும். சாதி, மதப் பாகுபாடுகளைக் கடுமையான தனது சட்டங்களால் ஒழித்து சமநீதி நிலவுகின்ற ஒரு சமூகத்தைக் கட்டமைக்க உறுதி கொள்ள வேண்டும். இதன் மூலமாக வேலை வாய்ப்புகளைப் பெருக்கி உழைப்புக்கு உகந்த ஊதியத்தைப் பெறுகிற நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கொண்ட மனிதர்கள் நிரம்பிய உலகத்தை நோக்கிப் பயணம் செய்ய வேண்டும். தேர்வு செய்த மக்களின் வரிப்பணத்தையும், உழைப்பையும் ஆட்சி செய்கிற அதிகார மையங்கள் என்கிற தங்கள் கற்பனையில் இருந்து நமது திராவிட இயக்க அரசியல்வாதிகள் வெளியேறியதாகத் தெரியவில்லை, முதல்வர் உட்பட ஊரை ஆள வந்திருக்கிறோம், உங்களை ஆள வந்திருக்கிறோம் மாதிரியான ஆதிக்க மனப்போக்கே மக்கள் பிரதிநிதிகள் நடுவில் ஆழ வேரூன்றி இருக்கிறது. பல்வேறு மட்டங்களில் நடக்கும் ஊழல்களும், கையூட்டுத் திருட்டும் ஆட்சி அதிகாரம் என்பது எந்த ஊதியமும் இன்றி மக்களுக்குச் செய்யும் பணி என்பதை மாற்றி அவர்களிடம் கொள்ளை அடிப்பதற்கான ஒப்பந்தம் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. ஏறக்குறைய எந்த அரசுத் துறையும் ஊழல்கள் அற்ற வெளிப்படையான ஒன்றாகக் காணக் கிடைப்பது தமிழக மண்ணில் அரிதான அதிசயமாக மாறி விட்டது. வரிப்பணம் முறையாகச் செலவு செய்யப்படுகிறதா என்று கேள்வி எழுப்பினால் மக்களின் வரிப்பணம் முழுவதும் பல்வேறு அமைப்புகளிடம் கடன் வாங்கி வாக்குகளைக் கவரும் இலவசத் திட்டங்களைச் செயல்படுத்தப் பயன்படும் மறைமுகத் திறவுகோலாக மாறி இருக்கிறது. கிடைக்கிற வரிப்பணத்தைப் பயன்படுத்தி வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும், எதிர்காலத்தை வளமான ஒன்றாக மாற்ற வேண்டும் என்கிற நிலையில் இருந்து வழுவி இன்றைய அரசியல் கட்சிகள் இலவசங்களைக் காட்டி ஏமாற்றும் குறுக்கு வழியைப் பின்பற்றுகின்றன என்பதை நாம் உணர வேண்டும், இலவசங்களை வழங்கச் செலவு செய்யப்படும் பணமும், உழைப்பும் வேற்று நாடுகளில் இருந்து நமக்குக் கிடைக்கப் போவதில்லை, மாறாக அதற்கான பரிசுகளாக நாம் அடிப்படைத் தேவைகளின் விலையை, எரிபொருட்களின் விலையை, கல்விக் கட்டணங்களை, மின் கட்டணங்களை இரண்டு அல்லது மூன்று மடங்காக ஆட்சியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்கிற உண்மையை நாம் உணரத் துவங்கினால் இலவசங்கள் குறித்த எந்த வியப்பும் நமக்கு ஏற்படாது. தமிழக அரசின் பல்வேறு துறை வளர்ச்சி விகிதங்கள் வீழ்ச்சியில் இருக்கிறது, கடந்த ஐந்தாண்டுகளில் உற்பத்தி, தொழில் வளர்ச்சி, விவசாயம் மற்றும் கல்வி வளர்ச்சி விகிதங்கள் கடும் வீழ்ச்சியில் இருக்கின்றன, கல்விக் கட்டணங்கள் வானளவில் உயர்ந்து உயர் கல்வியை வறுமைக் கோட்டுக்குக் கீழிருக்கும் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் நுகர்வது பகல் கனவாக மாறிக் கொண்டிருக்கிறது, கல்வி நிறுவனங்களில் காணப்படும் வேறுபாடுகளும், பாடத் திட்டங்களும் வெவ்வேறு வகையான மன நிலையை மாணவர்களிடம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது, துவக்கப் பள்ளிகளில் அல்லது தனியார் பள்ளிகளில் நிலவும் ஒழுங்கற்ற கட்டண விகிதங்களைக் கட்டுப்படுத்த இயலாத அரசுகளும், ஆட்சியாளர்களும் கல்வியை வைத்துக் கொள்ளை அடிக்கும் முதலாளிகளுக்கு மறைமுகமாக உதவி செய்து கொண்டிருக்கிறார்கள், இன்றைக்கு நமது சமூகத்தில் உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வியில் ஆதிக்கம் செய்யும் பெரும்பான்மை முதலாளிகள் நமது அரசியல்வாதிகள் அல்லது அமைச்சர்கள் என்பது கல்வியின் நிலையை எடுத்துச் சொல்லும் ஒரு எடுத்துக்காட்டு. மருத்துவ வசதிகள் அல்லது உயிர் காக்கும் கருவிகள் நிரம்பிய தன்னிறைவு பெற்ற ஒரு அரசு மருத்துவமனையை நம்மால் கண்டு பிடிக்க முடியாது, ஆனால், தனியார் மருத்துவமனைகள் வீதிக்கு இரண்டாக முளைத்துக் கிடக்கிறது, அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் பெரும்பான்மையான மருத்துவர்கள் தனக்கென ஒரு தனியார் மருத்துவமனையை நடத்திக் கொண்டு பணம் செய்வதில் குறியாய் இருப்பதை தமிழகத்தின் காக்கை குருவிகள் கூட அறியும், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்பது கூட மீண்டும் தனியார் மருத்துவமனைகளையும், அவர்களின் கொள்ளையையும் ஊக்குவிக்கும் ஒரு திட்டமாக இருக்குமோ என்று அஞ்சத் தோன்றுகிறது, ஏனென்றால் அரசு மருத்துவமனைகள் எல்லா வசதிகளும், உயிர் காக்கும் மருந்துகளும், நவீன மருத்துவத்துக்கான கருவிகளும் கொண்டிருக்குமேயானால் இப்படியான ஒரு திட்டமே தேவை இல்லை. அரசு மருத்துவமனைகளின் பணியே அதன் மக்களின் உயிர் காப்பது தான் என்பதை நாம் இன்னும் உணரவில்லை. முதல்வரின் உறவினர்களோடு தொடர்புடைய பல மனிதர்களின் பெயர் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தும் தனியார் நிறுவனங்களின் பெயரோடு உச்சரிக்கப்படுவது இந்தத் திட்டத்தின் நம்பகத் தன்மையைக் குலைக்கிறது. குடிநீருக்காகத் தொலைதூரங்களை நோக்கிப் பயணிக்கும் வறண்ட பாலை நிலங்களைப் போல நமது கிராமங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன, தூய்மைப் படுத்தப்பட்ட குடிநீரை எந்தக் குடிமகனும் இந்த அரசிடம் இருந்து பெற முடியாத சூழல் நிலவுகிறது. குடிநீர் அருகில் கிடைக்கும் கிராமங்களில் நிலவும் சாதீய வேறுபாடுகள் ஒடுக்கப்பட்ட மக்களை அந்தக் குடிநீரை நுகரும் ஆற்றல் அற்றவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது, தமிழகத்தின் பல கிராமங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் இருந்தும் அவை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பயன் பெரும் உயர் சாதித் தொட்டிகளாக இருப்பதை ஏனோ மாற்றி மாற்றி இரண்டு திராவிட அரசுகளும் கண்டு கொள்ளவே இல்லை, ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் வாழும் பகுதிகளில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அழுக்கடைந்து நாற்றம் அடிப்பதை நவீனத் தீண்டாமை என்று தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனென்றால் அவற்றை சுத்தம் செய்ய வேண்டிய பணியாளர் பெரும்பாலும் அந்தக் கிராமத்தின் ஆதிக்க சாதியைச் செர்ந்தவரியா இருப்பார், நகர்ப் புறங்களில் வசிக்கும் குடிசைப் பகுதி மக்களின் வாழ்க்கை நீருக்காகவே நடப்பது போல ஒரு மிகக் கொடுமையான சூழலை எல்லா நகரங்களிலும் நாம் கண்டபடியே தான் பயணிக்க வேண்டியிருக்கிறது, குடிநீரைத் தவிர்த்து புழங்கும் நீரையும் இப்போது விலை பேசும் தனியார் முதலாளிகள் பெருகிக் கொண்டு வருவதை இந்த ஆட்சியாளர்கள் தங்கள் சாதனையாகச் சொன்னால், இலவசங்களின் மாயையில் இருந்து நாம் வெளியேறி வர முடியும். மாநிலத்தின் பல்வேறு கிராமங்களுக்கு சாலை வசதிகளும், பேருந்து வசதிகளும் இல்லை என்பதை நமது ஆட்சியாளர்கள் ஒப்புக் கொள்வார்களோ இல்லையோ, தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் உணர்ந்து கொள்வார்கள், ஒப்புக் கொள்வார்கள், கடந்த விடுமுறையின் போது நாகர்கோவில் அருகில் திசையன்விளையிளிருந்து பிரிந்து செல்லும் மாங்குளம், பாப்பான்குளம் போன்ற ஊர்கள் பேருந்தையும், தார்ச் சாலைகளையும் கடந்த அறுபது ஆண்டுகளில் கண்டதே இல்லை என்கிற உண்மையை உணர்ந்த போது விடுதலை அடைந்து பெரியாரின் கனவுகளை நோக்கிப் பயணம் செய்வதாகப் பீற்றும் இந்த இரண்டு திராவிட அரசுகளின் அவலமான ஆட்சி முறையும் திட்டங்களும் கண் முன்னர் நிழலாடுகிறது. இரவுகளில் இந்தக் கிராமங்கள் தீவுகளைப் போல எந்த இணைப்பும் இல்லாத கரும்புள்ளிகளாக மாறிப் போய் இருக்கின்றன, மலைக்கிராமங்களில் பலவற்றுக்கு இன்னும் மின்வசதி இல்லை, மருத்துவம், கல்வி, சாலை, போக்குவரத்து என்று எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத சோகங்களாக நீண்ட காலமாய் இந்தக் கிராமங்கள் யாரையோ எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றன. தொலைக்காட்சிகள் வழங்கப்பட்டிருக்கின்றன, ஆனால், அவற்றை மின்சாரமின்றி எதனைக் கொண்டு இயக்குவது என்று தெரியாமல் மக்கள் விழி பிதுங்கிக் கிடக்கிறார்கள். சாதி ஒரு வளரும் கிருமியைப் போல தமிழகமெங்கும் கடந்த அறுபது ஆண்டுகளில் ஊடுருவி இருக்கிறது, தொடர்ந்து திராவிட அரசியல் இயக்கங்களில் அறிமுகம் செய்யப்பட்டுக் கிளைத்துத் தழைக்கிற சாதிய வேட்பாளர் முறையால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நசுக்கப்பட்டும், அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டும் சீரழிந்து கிடக்கிறது, ஆட்சியாளர்களால், அதிகாரிகளால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் மக்களாக தலித் மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் கிடக்க இலவச அரிசியும், இலவசத் தொலைக் காட்சியும் அவர்களின் கீழ்நிலை வாழ்க்கை முறையை எப்படி மாற்றி அமைக்கும் என்பதை எல்லாம் தெரிந்த கலைஞரும், மெத்தப் படித்த ஜெயலலிதாவும் சொன்னால் தான் உண்டு. ஒரு மனிதனை அடிமைத் தளையிலிருந்து மீட்க முடியாத, அந்த அடிமைத் தளையை ஆதரித்து ஊக்குவிக்கிற அரசுகளைக் கொண்டிருப்பதும், அந்த அரசுகளிடம் இருந்து இலவசக் கண்துடைப்புகளைப் பெறுவதும் தான் நமது மக்கள் அவர்களைத் தேர்வு செய்ததற்கான பரிசுகள். இரட்டைக் குவளை முறையை ஒழிக்க முடியாத ஒரு அரசிடம் இருந்து அரிசி, தொலைக்காட்சி போன்ற பொன்னையும் பொருளையும் எந்த ஒடுக்கப்பட்ட இளைஞனும் எதிர் நோக்கி இருக்கவில்லை, அவனுக்கு உண்மையில் தேவையாய் இருப்பது மரியாதையான இருப்பு. மதுரையில் இருந்து இருபது கிலோ மீட்டர் சுற்றளவில் எண்ணற்ற கிராமங்களில் இன்னமும் ஆதிக்க சாதி மக்கள் வசிக்கிற தெருக்களின் வழியாக ஒடுக்கப்பட்ட மக்கள் நடக்க இயலாத பெருங்கொடுமை நடக்கிற போது அதே கிராமங்களில் தேர்தல் கால வாக்குறுதிகளை அம்பலங்களுக்கு வழங்கிக் கொண்டிருப்பது முதல்வர் ஐயாவின் மகன் அழகிரி என்பது தான் விசித்திரமான பெரியார் தத்துவம். ஒடுக்கப்பட்ட மக்களின் விளைநிலங்களில் விளையும் பொருட்களை கண் காணாத இடத்தில் கொண்டு சென்று தான் விற்பனை செய்ய முடியும், ஒரு தலித் விவசாயியின் நிலத்தை உழவும், பயிர் செய்யவும் அவனைத் தவிர வேறு எந்த மனிதனும் வரமாட்டான் என்பது கலைஞர் ஐயாவுக்குத் தெரியும், அதனால் தான் அவர் அவனுக்கு இலவச அரிசியையும், இலவசத் தொலைக் காட்சியையும் வழங்கி ஆற்றுப் படுத்தி இருக்கிறார். சாதி வேறுபாடுகள் அற்ற தமிழகக் கிராமங்கள் இன்றைக்கு இல்லை என்னும் அளவுக்கு வேட்பாளர்களின் தேர்வும், அமைச்சர்களின் தேர்வும் சாதியை மையப்படுத்தி நடந்து கொண்டிருக்கும் இந்த ஆட்சியைத் தான் நாம் பெரியாரின் கனவான சமநீதி ஆட்சி என்று நம்ப வேண்டும். ஏனென்றால் முதல்வர் தலித் மக்களின் வீட்டில் சம்பந்தம் வைத்துக் கொண்டிருக்கிறார். இலவசத் திட்டங்களை நிறைவு செய்யத் தேவைப்படும் பணமும், பொருளும் கலைஞர் அய்யா வீட்டுத் தோட்டத்திலோ, ஜெயலலிதா வீட்டுக் கொல்லைப் புறத்திலோ இருந்து கொண்டு வரப்படுவதில்லை, மாறாக அந்தப் பணம் நீங்களும், நானும் காலமெல்லாம் உழைத்து, அரசுக்கு வரி செலுத்தி நேர்மையாக நடந்து கொண்டதன் வலி. ஒன்றுக்கு மூன்றாக முதலாளிகளும், முதலாளித்துவக் காவலர்களும் நம்மிடம் இருந்து பறிக்கும் எரிபொருட்களின் விலை, பதுக்கி வைக்கப்பட்டுப் பின்னர் விலை ஏற்றம் செய்யப்படுகிற காய்கறிகளின் விலை, நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்லும் விலைவாசிகளின் ஏற்றம், தொடர்ந்து விவசாய நிலங்களை இழந்து நகரத்துக்குள் துரத்தி அடிக்கப்படுகிற ஏழை விவசாயிகளின் குருதி, இலவச அரிசியும், இலவசத் தொலைக்காட்சியும் இல்லம் நோக்கி வந்து விட உழைப்பவனின் பொருள் எங்கே போகிறது, அரசு மது விற்பனைக் கூடங்களில் இறைந்து கிடக்கும் காலி பாட்டில்கள் மாதிரி காணாமல் போய் விடுகிறது, உழைப்பு, விழிப்புணர்வு, அறிவு, தன்மானம் எல்லாவற்றையும் இழந்து அங்கே விழுந்து கிடப்பான் திராவிடன். அவனிடம் எஞ்சி இருப்பது அவனுக்கு இலவசமாக வழங்கப்பட்ட பொங்கல் வேட்டியாக இருக்கலாம். இலவசங்களால் நாம் தொலைநோக்கில் பொருளாதார நன்மைகளை, நமக்கான உரிமைகளை, சமூக விழிப்புணர்வை, கல்வியை, அடிப்படை வசதிகளை, மருத்துவ வாய்ப்புகளை, சுய மரியாதையை இன்னும் எல்லாவற்றையும் இழந்து தனியான குணம் கொண்ட தமிழர்கள் என்னும் நிலையில் இருந்து மாறி வழக்கமான இந்துக்கள் அல்லது இந்தியர்கள் என்கிற திசையை நோக்கிப் பயணிக்கிறோம் நண்பர்களே, ஆம், அது தானே ஆட்சியாளர்களுக்கு வேண்டும், இனி அவர்களுக்குத் தேவை எல்லாம் கேள்விகள் எதுவும் கேட்காத, சிந்திக்க இயலாத இலவசங்களில் திளைத்துக் கிடக்கும் திராவிடர்கள் அல்லது தமிழர்கள். வெல்க திராவிடம், வாழ்க தமிழர்.

நன்றி : முக ஏடு தமிழ் ஈழம்
மூலம்: http://tamizharivu.wordpress.com/
இப்படிக்கு: Arivazhagan Kaivalyam