புதன், ஜனவரி 25, 2017

மனுசங்கடா நாங்க மனுசங்கடா !

மாணவர்களோடும் மக்களோடும் பல்வேறு களங்களில் நின்று போராடிய தமிழர்களத்தின் தம்பி தங்கையருக்கு என் வணக்கமும்! வாழ்த்துக்களும்!
தமிழர்களம் என்ற அடையாளத்தை உருக்கி இனம் என்கிற உலையில் ஒன்றித்ததை நினைத்து பெருமையடைகிறேன்!
என்னைவிடக் களம் உயர்ந்தது! களத்தைவிட இந்த நாடு உயர்ந்தது! என்பதை எப்போதும் மனதில் நிறுத்து!!
போராட்டம் அரசு நிர்வாகத்தின் (நீதிமன்றம், போலீசு, அரசியல் கட்சிகள், தரகர்கள்,) அடிவயிற்றைக் கலங்கிவிட்டது!
எனவே,
கீழவெண்மணியில், பரமக்குடியில், குறிஞ்சாக்குளத்தில், தாமிரபரணியில், முல்லைப்பெரியாற்றில், கூடங்குளத்தில், தங்கவயலில், பெங்களூரில், உஞ்சனையில், கொடியங்குளத்தில் போன்ற களங்களில் நடத்திய அதே கொலைவெறியாட்டத்தை மீண்டும் மெரீனாவில், சென்னையில், அலங்காநல்லூரில், தமுக்கத்தில் என்று நாடெங்கும் இந்தக் காட்டுமிராண்டிகள் அரங்கேற்றியிருக்கின்றனர்!
சேரிகள், குப்பங்கள், சிறுபான்மையர், நேர்மையாளர்கள், மாணவர்கள், அப்பாவிகளே எப்பொழும் இவர்களது இலக்கு! இப்போதும் அவர்களே இலக்காகியிருக்கின்றனர்!!
அக்கிரகாரங்களிலோ, அன்னியர் கோலோச்சும் வீதிகளிலோ, நகரங்களிலோ காவல்துறை வன்முறை நடந்ததாக வரலாறு கிடையாது
இந்தச் சேரிகளும், குப்பங்களும், சிறுபான்மையரும், நேர்மையாளர்களும், மாணவர்களும், அப்பாவிகளும் ஒன்று சேரவிடாமல் தடுப்பதே தரகர்கள் நடத்தும் சதியாட்டம்!
“கட்சிகளை உள்ளே விடமாட்டோம்” என்று மாணவர்கள் முடிவெடுத்தபோது கட்சிகளின் அடுத்தகட்டத் தரகரர்கள் உள்ளே நுழைந்தனர்!
வழக்கமாக மூக்கை நுழைக்கும் “திராவிடர்” வைகோ வரவில்லை. ஆனால் அவரது பகராளி உள்ளே இருந்தார்! திராவிட ஆக்டோபசின் அனைத்து பகராளிகளும் மிகவும் பக்கத்தில் வந்து குந்திக் கொண்டர்! இரண்டாம் நாளே முடிவுரையின் தொடக்கம் அவர்களால் எழுதப்பட்டது!
தேவகோட்டையில் அதாவது தனது சொந்த மண்ணில் எந்தச் சல்லிக்கட்டுக்காக தொடர்ந்து பல ஆண்டுகள் பேராடிய இமயம் சரவணனை உள்ளே வரவிடாமல் சிலர் தடுத்தனர்! அவர்களுக்கு யார் எவர் என்ற அடையாளம் தெரியவில்லை!
சூழ்ச்சி, மறைமுக இலக்கு, தரகு, உள்ளொன்று புறமொன்று, தான் தனது என்று தன்னைச் சுற்றி நடத்தும் போராட்டம் என்று கூடங்குளம் போன்ற மற்ற போராட்டங்களில் பார்த்த அதே பாத்திரங்கள் இந்தப் போராட்டத்திலும் களமாடின!
போலிகளை நம்புவதாலேயே போராட்டங்கள் சிதைக்கப்படுகின்றன என்று இப்போதாவது இந்த இனம் உணருமானால் நாளைய நல்லவைகளுக்கு அது நல்லது!
இதற்கிடையில், “சல்லிக்கட்டுக்காக போராடுகிற இந்த மாணவர்கள் ஏன் கடந்த காலங்களில் இதைவிடக் கொடுமையான சூழல்களில் போராடவில்லை” என்று ஒருவிதத்தில் ஞாயமான ஒரு கேள்வி குற்றச்சாட்டாக, குறையாக, குமுறலாக எழுந்தது!
உலகத்தில் பல நூறு ஞாயமான போராட்டங்கள் நடக்கின்றன! இதில் பங்கேற்றவன் அதில் ஏன் பங்கேற்கவில்லை? என்று கேள்வி எழுப்புவது நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல!
இரண்டாவது அதைவிட முக்கியமானது என்னவென்றால், நடந்த போராட்டம் வெறுமனவே சல்லிக்கட்டுக்காக மட்டுமே கிளர்ந்து எழுந்த கூட்டம் அல்ல! அல்ல! அல்லவே அல்ல!
எதிரிகளும் நம் நண்பர்களும் நம் தமிழர்களும் இதைப் புரிய வேண்டும்!
தொடர் தாக்குதலுக்கும், வன்முறைக்கும், அநீதிக்கும் இலக்கான தமிழினம் பொறுத்துப் பொறுத்து அடக்கி வைத்து அடக்கி வைத்து இறுதியில் ஏதோ ஒரு புள்ளியில் ஆர்ப்பரித்து எழுந்துவிட்டது! அவ்வளவுதான்!
காவிரியில் துரோகம், முல்லைப் பெரியாற்றில் துரோகம், கூடங்குளத்தில் துரோகம், ஈழத்தில் துரோகம், ஏதிலியர் முகாம்களில் துரோகம், கீழவெண்மணியில் துரோகம், உஞ்சனையில் துரோகம், குறிஞ்சாக்குளத்தில் துரோகம், கொடியங்குளத்தில் துரோகம், கடற்கரையில் துரோகம், சேரிகளில் துரோகம், விவசாயிகளுக்குத் துரோகம், ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் துரோகம், பெண்களுக்குத் துரோகம், இசுலாமியருக்குத் துரோகம், கல்வியில் துரோகம், நிர்வாகத்தில் துரோகம், நீதியில் துரோகம் இப்படி அரசுகள் நம் மக்களை மிக மிக இழிவாக நீண்டகாலம் நடத்தியதைப் பார்த்துப் பார்த்து இறுதியில் இப்படி எழுந்திருக்கிறது!
குரல் சல்லிக்கட்டுகானதே தவிர அதன் ஆற்றல் நீண்ட அடக்குமுறையிலிருந்து திமிரிப் பிறந்திருக்கிறது!
ஒவ்வொரு நல்ல கட்சியும் இயக்கமும் ஏதோ ஒரு மைய இலக்கை வைத்துப் போராடுகிறது!
ஈழத்திற்காக குரல் கொடுக்கிறவன் இங்குள்ள தமிழனுக்கு எதிரியல்ல!
அல்லது இங்குள்ள தமிழனுக்குக் குரல் கொடுக்கிறவன் ஈழத்திற்கு எதிரியல்ல!
அடக்கத் துடிக்கிற அத்தனை நாய்களும் செந்நாய்கள் போல ஒன்றாய் நிற்கின்றன!
அடங்க மறுக்கிற நம் மக்கள் மட்டுமே பிரித்தாளப்படுகிறோம்!
நம் வரலாற்றில் மற்றொரு களம் தற்காலிகமாக மௌனித்திருக்கிறது!
போர் தொடர்கிறது! போரில் வெற்றி பெறுவதே இறுதி இலக்கு!
சண்டைகளில் தோற்று போரில் வெல்வதே சிறந்தது!
பாசறைப் பணிகள் நடக்கட்டும்!
அரிமாவளவன்
பொதுச் செயலாளர்
தமிழர்களம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக