வெள்ளி, மார்ச் 02, 2012

கருணாநிதி சொல்லும் திராவிடம்!

திராவிடத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் அரும்பாடு பட்டுவரும் இந்நேரத்தில் அவர் விடுத்துவரும் அறிக்கைகள் தமிழர்களைக் குழப்பத்தின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறது.
தமிழும் திராவிடமும் ஒன்றுதான் என்று சொல்கிறீர்கள். அப்படியானால் தெலுங்கு திராவிடமில்லையா? தெலுங்கரான நீங்கள் திராவிடரில்லையா? மலையாளியான எம்.ஜி.ஆரும் கன்னடரான செயலலிதாவும் திராவிடரில்லையா?
இல்லை, கன்னடம், தெலுங்கு, துளு, மலையாளம், தமிழ் ஆகியனதான் திராவிடம் என்றால், “ஏன் திராவிட ஆட்சியில் ஒரு தமிழர்கூட தலைமைப் பதவிக்கு வரஇயலவில்லை?” ஆக, திராவிடம் என்பது தமிழரல்லாதவர்களின் ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் அரசியல் கருத்தியலா? இல்லையா?
திராவிட இயக்கத்தின் சாதனைகள் என்று அச்சிட்டது, சிலை வடித்தது, விருது கொடுத்தது போன்ற மேலோட்டமான செயற்பாடுகளைப் பட்டியலிடுகிற நீங்கள் திராவிடம் ஆட்சிக்கு வந்தபின் நடந்த கேடுகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?
கீழ வெண்மணிப் படுகொலை, குறிஞ்சாக்குளம் படுகொலை, உஞ்சனை, மேலவளவு, கொடியன்குளம், தாமிரபரணி, பரமக்குடி என்று எண்ணிலடங்காப் படுகொலைகளும் சாதி மற்றும் இன ஒடுக்குமுறைகளும் திராவிடத்தின் ஆட்சியில் அரங்கேறிய அலங்கோலங்கள்தானே!
பார்ப்பன எதி£ப்பு என்ற போர்வையைக் போர்திக்கொண்டு வந்த திராவிட இயக்கங்கள் தமிழரல்லாத தெலுங்கு, கன்னட, மலையாள ஆதிக்கத்தைத்தானே தமிழ்நாட்டில் காலூன்ற வைத்திருக்கிறது!
தமிழ் தமிழ் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிட இயக்கங்களின் அரை நூற்றாண்டுகால ஆடசிக்குப் பிறகும் தமிழ் எங்கே இருக்கிறது? பெயர்ப்பலககையில் இருக்கிறதா? ஆட்சி மொழியாக இருக்கிறதா? வழக்குமன்ற மொழியாக இருக்கிறதா? பள்ளியில் பயிற்று மொழியாக இருக்கிறதா? இந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் ஆங்கிலத்துக்குத் தாரை வார்த்ததுதானே திராவிட இயக்கங்களின் சாதனை?
ஆட்சிக்கு வந்த அத்தனைத் திராவிட இயக்கத் தலைமையின் மீதும் அடுக்கடுக்காக வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் அத்தனையும் பொய்யா? வீராணம் முதல் அலைக்கற்றைவரை ஊழலில் தி.மு.க. செய்தது சாதனையா? அல்லது தி.மு.க.வின் எதிரணியில் இருக்கிற அ.தி.மு.க.வின் தலைமை இன்றைக்கும் பெங்களூர் நீதி மன்ற வளாகங்களிலே படியேறி இறங்குகிறதே இவையெல்லாம் சாதனைகளா? இல்லை வேதனைகளா?
தமிழகத்தில் திராவிடம் மலர்ந்ததாக மார் தட்டிக் கொள்ளும் இதே காலகட்டத்தில்தானே ஈழத்தில் தமிழர்கள் தன்னுரிமைக்காகப் போராடி வந்தார்கள். பல கோடித் தமிழர்களின் தலைமையை ஏற்ற திராவிடம் சில லட்சம் தமிழர்கள் ஈழத்தில் அல்லலுற்றபோது என்ன செய்தீர்கள்? குட்டிமணி செகனைக் காட்டிக் கொடுத்ததிலிருந்து முள்ளிவாய்க்கால் படுகொலை வரை நீங்கள் போட்ட நாடகங்கள் எத்தனை எத்தனை?
காவிரியைக் கன்னடர்களிடம் காவு கொடுத்தது எப்போது?
பாலாறு பாழனாது திராவிடத்தின் ஆட்சியில் இல்லையா?
முல்லைப்பெரியாறு சிக்கல் முற்றியதிலும் உங்கள் கையாலாகாத்தனமும் காட்டிக் கொடுப்பும் இல்லையா?
கிழக்குக் கடற்கரையில் 550 மீனவத் தமிழர்கள் அன்னியநாட்டுப் படையால் காக்கைக் குருவி போல சுட்டுத் தள்ளப்பட்டபோது கைசூப்பிக் கொண்டு கடுதாசி போட்டீர்களே தவிர உருப்படியாக எதைச் செய்து அப்படுகொலைகளைத் தடுத்தீர்கள்?
கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டபோது என்ன செய்தீர்கள்?
இறுதியில் திராவிடத்தின் சாதனைதான் என்ன?
ஊழல் சாதனைகள், கொள்ளையடித்து குடுமபத்தை வளர்த்த சாதனைகள், தமிழரல்லாதவர்கள் கொற்றத்தை இந்தத் தமிழ் மண்ணில் வேறுரூன்ற வைத்த சாதனைகள்! தமிழ்ச் சாதிகளுக்குள் மோதல் போக்கை உருவாக்கி குளிர்காய்ந்த சாதனை! சாராயத்தை ஆறாக ஓடவிட்ட சாதனை! திரை மாயையைத் திணித்த சாதனை! இவைகள் போக, வேறு என்ன சாதனை செய்தீர்கள்?
இப்படிப்பட்ட திராவிடம் தமிழ் மண்ணில் இருக்க வேண்டுமா? இல்லை இல்லாது போக வேண்டுமா?
என்னதான் நீங்கள் எட்டி எட்டி குட்டிக்கர்ணம் போட்டாலும் தமிழர்கள் இன்னும் ஏமாற மாட்டார்கள் என்று மட்டும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என்று தமிழர்களத்தின் பொதுச் செயலாளர் திரு. அரிமாவளவன் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக