புதன், அக்டோபர் 23, 2013

“அணுஉலையே வெளியேறு” இயக்கம் தொடங்குவோம்!! அரிமாவளவன் எச்சரிக்கை!!!

மத்திய அரசு மக்களை மட்டும் ஏமாற்றவில்லை! மாநில அரசையும் ஏய்க்கிறது!  

        கூடங்குளம் அணு உலையிலிருந்து இதோ வந்துவிட்டது மின்சாரம் அதோ வந்துவிட்டது மின்சாரம் என்று மத்திய அரசு நம் காதில் பூ சுற்றி வருகிறது. 
      
    மத்திய அரசின் மதிகெட்ட பரப்புரைகளைக் கேட்டு மயங்கிக் கிடந்த அணு உலை ஆதரவாளர்கள்கூட இப்போது தலையில் துண்டுபோட்டுக்கொண்டு உலவுகின்றனர்.  பொது மக்களின் வரிப்பணத்தை வீணடித்து உருவாக்கிய ஒரு நாசகார ஆலையை மத்திய அரசு வேண்டுமென்றே நியாயப்படுத்தி வந்தது.  தரம் குறைந்த உதிரிப்பாகங்கள், ஊழல்கள், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யாத உதவாக்கரை அரசியல் ஆகியனவற்றின் வடிவமாகத்தான் இன்று கூடங்குளம் அணுஉலை தலை குனிந்து நிற்கிறது.  இதற்கிடையில் சில ஆண்டுகளாகவே, மத்திய அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டவர்கள் கைக்கெட்டும் தூரத்தில் மின்சாரம் வந்துவிட்டது என்று பூச்சாண்டி அரசியல் செய்து வந்தார்கள்.  மக்களை மடையர்கள் என்று எண்ணி அரசியல்செய்யும் இவர்கள் இப்போது மாநிலத்தில் இருக்கும் அரசையும் தொடர்ந்து ஏமாற்றும் விதமாக நடந்து கொள்கின்றனர். 
   
 மணல் கொள்ளை, மீனவர் படுகொலை போன்ற மக்களை வதைக்கும் நிகழ்வுகளில் பாரமுகத்தோடு செயல்படும் மாநில அரசு இப்போது கூடங்குளம் அணுஉலை விவகாரத்திலும் மத்திய அரசு தமிழ் மக்களை ஏமாற்றுகிறது என்று அறிந்தும் அமைதி காத்து வருவது தமிழ் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது.  தமிழக மக்களின் காவலரணாக இருக்க வேண்டிய மாநில அரசு தில்லி அரசின் எடுபிடியாக ஏவலாளியாக மாறிக் கிடப்பது யானை தன் தலையில் மண்ணையள்ளிப் போட்ட கதையாகிவிட்டது.  “கூடங்குளத்தை விட்டு வெளியேறுங்கள்” என்று இந்த பம்மாத்துப் பேர்வழிகளுக்கு தமிழக அரசு வெளியேற்றும் வழி காட்டாவிட்டால் ஆளும் கட்சியை தமிழக மக்கள் வெளியேற்றும் நாள் தொலைவில் இல்லை என்பதை அவர்கள் அறிய வேண்டும். 
    
 கூடங்குளம் அணுஉலையை மாநில அரசு வெளியேற்ற முனைப்பு காட்ட மறுத்தால், “அணு உலையே வெளியேறு இயக்கத்தை தமிழர்களம் தொடங்கும் என்று எச்சரிக்கிறேன், என்று தமிழர்களத்தின் பொதுச் செயலாளர் திரு. அரிமாவளவன் இன்று அறிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக