திங்கள், அக்டோபர் 18, 2010

கர்நாடக இசை தமிழிசையே (இறுதிப்பாகம்) : T.செளந்தர்


கல்+நாடு=கன்னாடு. கன்னாடு என்பது மலைகள் நிறைந்த நாடு . மலைகள் நிறைந்த பகுதியாதலால் தமிழர்கள் அதனை இவ்வாறு அழைத்தார்கள்.

ஆங்கிலத்தில் கில் என்ற சொல் சொல்லும் கல் என்பதிலிருந்து கிடைத்ததே என ஆராய்சியாளர்கள் சொல்கிறார்கள். சோமேசபுல்லேகமால் என்ற மன்னன் தவறுதலாக கூறியது நிலை பெற்றுவிட்டது. ஆனால் பார்ப்பனர்கள் அது தமிழ்நாட்டு இசையல்ல என்று காட்டுவதற்காகவே திட்டமிட்டு கர்நாடக இசை என்று பயன்படுத்திவருகிறார்கள்.

கர்நாடக இசை என்பதே தமிழிசைக்கு பார்ப்பனர்கள் இட்டுக்கட்டிய பெயர் என்றும், தமிழிசை தான் கர்நாடக இசை என்றும் ஒத்துக் கொள்ளும் பார்ப்பன இசையறிஞர்கள் மறந்தும் தமிழிசை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது கிடையாது. இன்று சில சங்கீத நூலாசிரியர்கள் சிலர் தமிழிசை வேறு என்று சாதுர்யமாகவும்,சமரசமாகவும் எழுதிவருகின்றனர்.

“ஆதி இசை வகைகள் 12000 .பண்கள் 103வகை. இசைகுறிப்பெயர்கள் ” என்று தமது ஆராச்சிமுடிவுகள் குறித்து நூலாக எழுது முன்பே ஆப்ரகாம் பண்டிதர் , சுதேச மித்ரன், த இந்து போன்ற பத்திரிகைகளுக்கு அனுப்பினார் ஆனால் அவை இருட்டிப்பு செய்யப்பட்டன..

சங்கீதமும் மூர்த்திகள் :

1.தியாகய்யர்(1767- 1847)

2.சியாமாசாஸ்திரி(1762- 1827)

3.முத்துஸ்வாமிதீட்கிதர்(1776- 1835)

தமிழருக்குப் புரியாத மொழிகளில் பாடு முன்னரே தமிழில் கீர்த்தனைகள் எழுதியும் பாடியும் த்மிழிசையை வளர்த்த மூவர் தமிழ் நாட்டிலேயே வாழ்ந்தார்கள். அவர்கள்

1.சீர்காழி முத்துதாண்டவர்(1525- 1605)

2.சீர்காழி அருனாசலகவிராயர்(1711- 1779)

3.மாரி முத்தாபிள்ளை(1712_ 1787)

தாம் வாழ்ந்த காலத்திலேயே புகழ் பெற்ற இந்த மூவரின் அடியொற்றியே பின் வந்த மூவர்களும் மும் மூர்த்திகள் ஆனார்கள். முத்துத்தாண்டவர் தான் முதன் முதலில் கீர்த்தனை வடிவத்தை அமைத்தார். பல்லவி, அனுபல்லவி, சரணம் எனும் அமைப்பு முறையையும் வகுத்தவர் அவரே.

கீர்த்தனை இசை வடிவம் தமிழ்நாட்டு மக்களுடையது. புரந்தரதாசருக்கோ, அன்னமாச்சாரியாருக்கே இந்த வடிவம் தெரியாது. இறைவனின் பெயர்களை வரிசையாககூறும் தேவர்நாமா என்ற வடிவத்தை புரந்தாதாசரும், நாமபஜனை என்பதைதான் அன்னமாச்சாரியாரும் எழுதியுள்ளனர். அவர்களும் கீர்த்தனைகள் இயற்றவில்லை.

இராமபிரமம் என்பவர் பிழைப்பு தேடி தமிழ்நாட்டில் குடியேறிய தெலுங்கு பிராமணர். அவரின் புதல்வர்களில் ஒருவர் தான் தியாகய்யர் என்று அறியப்படுகின்ற தியாகராஜர்.இவர்களது தாய் மொழி தெலுங்கு .தியாகய்யர் தான் வாழ்நாளிலே ஒரே ஒரு தடவை தான் ஆந்திரா சென்றுள்ளார். தமிழ் நாட்டில்பிறந்து வளர்ந்த அவர் தமிழ்நாட்டு இசையைத்தான் கேட்டார் .

கோவில்களில் இசைக்கப்பட்ட தேவார இசையையும்,நாதஸ்வர இசையையும், தமிழ் கீத்தனங்களையுமே அவர் கேட்டிருப்பார்.இவ்விதம் தமிழர்களிடமிருந்து தான் பெற்ற இசை அறிவை பயன்படுத்தி தனது தாய் பாசையில் பாடல்களாக எழுதினார்.

அவரது பாடல்கள் கொச்சை தெலுங்கில் எழுதப்பட்டவை என்றும் இன்று விளங்குவது போல் விருத்தி பெற்ற இசையாக இருக்கவில்லை என்பதும், பின் வந்த இசைக்கலைஞர்கள் பாடும் முறைகளில் பல விருத்திகளை செய்தார்கள் என்பதும் . இசை ஆராய்ச்சியாளர்கள் கூற்று.

தியாகய்யர் எந்தெந்த தமிழ் கீத்தனங்களை தேவாரங்களை எல்லாம் “காப்பி” அடித்து தெலுங்கில் பாடல்களாக்கினார் என்று நீண்டதொரு பட்டியலை இசை அறிஞர் ச . ராமநாதன் வெளியிட்டு பாடியும் காண்பித்தார். தியாகய்யர் ஒரு பார்ப்பனர் என்பதால் அவரை தலையில் வைத்துக் கொண்டாடும் பார்ப்பனர்கள் இவற்றை எல்லாம் கேட்டும் செவிடர்கள் போல நடிக்கிறார்கள் அறிவால் வெல்லும் தகுதி அற்ற பார்ப்பனர்கள் சூழ்ச்சியாலும், சதியாலுமே தமது காரியங்களை சாதித்து வருகிறார்கள்.

தமிழர்கள் உருவாக்கிய இந்த இசை என்னென்றும் பக்திசார்ந்த இசையாக இருந்ததில்லை. தமிழ் கவிதை யாப்பு , இலக்கண நூல்களிலும், ,அவற்றின் உரைகளிலும் பக்தி மார்க்கம் குறித்த கவிதைகள் பற்றி விவாதிக்கப்படவில்லை. அது பற்றிய தவல்களுமில்லை. இலக்கியமும், இசையும் கி.பி.7 ம் நூற்றாண்டில் ஏற்பட்ட சமயப்போராட்டங்களின் பின்னர் தான் பக்திமார்க்கத்தில் இணைக்கப்பட்டன. இலக்கியமும் அவ்வாறே . ஆரம்பகால பக்தி இலக்கியங்கள் இலக்கியம் என்றளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.என்பதும் சந்தேகமே.

சைவ ,வைணவ வளர்ச்சிக்காகவும் ,பெளத்த ,சமண சமயங்களுக்கு எதிராகவும் இசை திருத்தப்பட்டது. பார்ப்பனர்கள் தங்கள் தேவைக்காக கடவுளையே உருவாக்கக் கூடியவர்கள் . கணபதி, முருகன் கதைகள் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். சிவபெருமானின் பிள்ளையான முருகனை வட இந்தியர்கள் வழிபடுவதில்லை என்பது சிறிய உதாரணமாகும். இசை தமிழ்நாட்டில் இறைவனுக்கும்.அல்லது பக்திக்கும் என என்றென்றும் இருந்ததில்லை.

அக்கால (கி.பி.7ம் நூற்றாண்டு) அரசியலே அதனையும் தீர்மானித்தது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

இவ்விதம் தமிழிசை பக்தி இயக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டது என்பது தமிழ் மக்கள் மத்தியில் இசைக்கு இருந்த செல்வாக்கினையே காட்டுகிறது . பின் அதுவே சம்பிரதாயமாகவும் மக்கள் மேல் திணிக்கப்பட்டது. தமிழிசையின் வ்லிமையால் தான் பிற சமயங்களிலிருந்து சைவத்தையும், வைணவத்தையும் காப்பாற்றமுடிந்தது. பார்ப்பனர்கள் உண்டாக்கிய இறைவனால் அல்ல. இந்த மத்ப் போராட்டங்களால் தான் தாழ்த்திவைக்கப்பட்டிருந்த (சாதிகள்) பாடகர்களின் தேவை முக்கியமாகியது. பாடல்களைப் பாடக்கூடியவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு கோயில் மண்டங்களுக்குள் நிறுத்தப்பட்டனர். பின்னர் இவர்களை “இசை வேளாளர்கள்” என உயர்த்தப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் பாலர் வகுப்புக்களில் நான் படித்த சைவ சமய பாடத்தில் சொல்லித்தரப்பட்ட நம்பியாண்டார்நம்பி என்பவரின் கதை இதை எழுதும் போது என் நினைவுக்கு வருகிறது . இந்த சைவ சமயம் என்பதை ஒரு பாடமாக படிப்பதில் என்ன லாபம் இருக்கிறது. எனநான் பல முறை சிந்தித்ததுண்டு ,சமணர்கள் கழுமரத்தில் ஏற்றப்பட்டார்கள்.

நம்பியாண்டார் நம்பி ஓர் அறையில் வைத்துப் பூட்டப்பட்டிருந்த ஆரம்பகால தேவாரப்பாடல்களை எவ்விதம் மீட்டெடுத்தார் போன்ற கதைகளின் முழுப்பரிமாணமும் இப்போது தான் புரிகிறது.

சமணர்கள் கழு மரத்தில் ஏற்றப்பட்டார்கள் என்பதை நான் அவர்கள் ஏதோஒரு மாமரம் போன்ற ஓர் மரத்தில் ஏற்றப்பட்டார்கள் என்றே நீண்ட காலம் எண்ணியிருந்தேன். (தவறு செய்யும் மாணவர்களை ப்ள்ளி ஆசிரியர்கள் பெஞ்சில் ஏற்றுவதுபோல ) .நம்பியாண்டார்நம்பியும் ,பேரரசன் இராஜராஜ சோழனும் தேவாரப்பாடல்களை மீட்டெடுக்கச் சென்றபோது பார்ப்பனர்கள் எப்படி எல்லாம் சதி செய்து நாடகமாடினார்கள் என்பதை சிவாஜி கணேசன் நடித்த ராஜராஜசோழன் என்ற தமிழ் சினிமாவில் மிக அழகாகக் காண்பித்தார்கள்.

சமணர்களை வெறுப்பதில் புகழ் பெற்றிருந்த சம்பந்தரைப் புகழ்ந்து பாடல் புனைந்த நம்பியாண்டார் நம்பிக்கும் காரியம் இலகுவாக இருக்கவில்லை .நம்பியின் பாடல்களில் சமணர்கள் கழுவிலேற்றப்பட்டதை காணலாம் பார்பனியத்திற்கு என்னென்ன விதமாக சேவை செய்தாலும் தமிழ் தமிழர்விரோதம் என்பதே அவர்களது கொள்கையாக இருந்து வருகிறது.

தமிழில் பாடு என்ற கோசம் எழும்பும் போதெல்லாம் ‘துவேசம்’ பேசுகிறார்கள் என்றும்’தமிழ்வெறியர்கள்’ என்றும் கூறுபவர்கள்’ இசைக்கு மொழி இல்லை என்பார்கள் . இசைக்கு மொழி இல்லை என்பது தமிழில் பாடு என்று சொல்லும் போதே வருகிறது. இசைக்கு மொழி இல்லை என்பதும் அரை உண்மையே.

அப்படி கூறும் பார்ப்பனர்கள் யாராவது நாதஸ்வரத்தையோ, தவிலையோ தொட்டிருக்கிறார்களா? வாசிப்பார்களா? மதம் மொழி கடந்து பலரும் நாதஸ்வரக்கலைஞர்களாக இன்று திகழ்கிறார்கள்.முஸ்லீம்கள்.பெண்கள் என பலர் நாதஸ்வரக்கலைஞர்களாக உள்ளனர். இசைக்கு மொழி இல்லை என்று மற்றவர்களின் வாயை அடைக்கும் பார்ப்பனர்கள் யாராவது நாதஸ்வரக்கலைஞர்களாக உள்ளனரா? இதற்கு காரணம் நாதஸ்வரம் தவில் சாதி என்ற பாகுபாட்டுடன் உள்ளடங்கி இருப்பதே. பறையும் இதைப்போலவே. இதற்கான இதற்கான சாதிகளையும் உருவாக்கியவர்கள் பிராமணர்கள்தான்.

தேவடியாள்கள் நட்டுவர்கள் பறையர்கள் கூத்தியர்கள் என இழிவு படுத்தப்பட்ட இந்த மக்களால் தான் நாதஸ்வரமும் சதிராட்டமும் தமிழிசையும் காலங்காலமாக தமிழ் மக்கள் மத்தியில் நிலைபெற்று வருகிறது. தேவடியாள்களால் ஆடப்பட்ட சதிராட்டமும் தமிழ்நாட்டு நடனமே. இந்த சதிராட்டம் என்பதே இன்று பரதம் எனப்படுகிறது. 2000 வருடங்களுக்குமேலாக ஆடப்பட்டு வரும் இந்த சதிராட்டம் வரும் இந்த சதிராட்டத்தை முதன் முதலாக ஒரு பிராமணப் பெண் ஆடியது 1931ம் ஆண்டுதான்.

ஆடிய அந்த சிறுமியின் பெற்றோரை கும்பிட்டு மன்றாடி பெரும்பாடுபட்டே நடாத்தப்பட்டது. ஆனால் 1994 ல் நடைபெற்ற தமிழிசைச் சங்க பண் ஆராய்ச்சி மாநாட்டில் பத்மா சுப்ரமணியம் என்பவர் “பரதம் ஒன்றிற்குதான் இருக்கிறது, வட மொழியில் தோறியது தான் அது. தமிழ்நாட்டில் இந்த நடனம் தோன்றியத்ற்கான ஆதாரம் ஏதுமில்லை . இதோடு ஆரியர்கள் ,திராவிடர்கள் என பேசுகின்ற இனவாதத்தை உடனே நிறுத்த வேண்டும். என்னைக்கேட்டால் இந்த நாட்டில் திராவிடர்கள் இருந்தார்கள் ஆரியர்கள் ஆக்கிரமிப்பு செய்தார்கள் பிறகு பண்பாட்டு ரீதியாகவும் ஆக்கிரமிப்பு செய்தார்கள் என்று எழுதப்பட்டிருக்கின்ற எல்லா பாட நூல்களையும்தடை செய்ய வேண்டும் ” என தமிழிசை சங்கம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் அந்த இயக்கத்தின் வீழ்ச்சி பார்ப்பணியத்துடனான அதன் சமரசத்தின் பின்னனிகளை சிந்திப்பது பயன் தரும்.

இந்த அடிப்படையிலிருந்து தான் கர்நாடக இசை என்பது களவாடப்பட்ட இசை என்று தெரிந்திருந்தும், தமிழிசையைப்பற்றி ஏராளமான தகவல்களைக் கொண்டுள்ள தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் எழுதிய 1360 பக்கங்கல் கொண்ட “கானமிர்த சாகரம்” மற்றும் சிலப்பதிகாரத்தில் இசை பற்றிய பகுதியான “அரங்கேற்றுக்காதை” சங்கீத பாடத்திட்டதில் சேர்க்கப்படவில்லை.

 

தமிழில் பாடுவது அவசியம் என்பது மற்றைய மொழிகளின்மீதான வெறியல்ல. இதை எல்லாம் தன் வாழ்நாளில் உணர்ந்து தெலுங்குமொழி தெரியாமல் சங்கீத வித்துவான்கள் சங்கீத கொலை செய்வதைக் கண்ட பார்ப்பணியத்தின் “மாந்தப்பற்று” முகம் கொண்ட பாரதி பின்வருமாறு கண்டனம் செய்கிறான்.

“இசை ஞானமில்லாதபடி பல்லவிகளும் ,கீத்தனங்களும் பாடுவோர் சங்கீதத்தின் உயிரை நீக்கிவிட்டு வெற்றுடலை அதாவது பிணத்தைக் காட்டுகிறார்கள். இந்த காலத்தில் சங்கீத வித்துவான்களிலேயே பலர் சங்கீதத்திற்கும் ரசங்களே உயிர் என்பதை அறியாதவர் .முக்காலே மும்மாகாணி வித்துவான்களுக்கு இந்த கீர்த்தனங்களின் அர்த்தம் தெரியாது . எழுத்துக்களையும், பத்ங்களையும் கொலைசெய்தும், விழுங்கியும் பாடுகிறார்கள். அர்த்தமே தெரியாதவனுக்கு ரசம் தெரிய வாய்ப்பில்லை.

நானும் பிறந்தது முதல் இன்று வரை பார்த்துக்கொண்டே வருகிறேன். பாட்டுக்கச்சேரி தொடங்குகிறது .’வாதாபிகணபதிம்’ என்று ஆரம்பம் செய்கிறார். ‘ராம நீ சமானமெவரு’…மரியாத காதூரா’…’வரசொசரி’….அய்யய்யோ அய்யய்யோ. ஒரே கதை ஒரேகதை;….” இப்படி மேலும் எழுதிக் கொண்டே போகிறான் பாரதி.

பொறுமையிழந்த பாரதியின் வாக்குமூலம் அது. கர்நாடக இசையின் தோற்றம் பற்றி கூறும் பார்ப்பணர்கள் அது சாம கானத்தில் பிறந்தது என்பர் . K.B.தேவாஸ், கிளைமென்ட்ஸ் போன்ற இசையறிஞர்களுக்கு ஆப்ராகாம் பண்டிதர் எழுதிய கடிதத்தில் பின்வருமாறு அறுதியிட்டு கூறுகிறார்.

“மேலும் ஆரிய சங்கீதமென்ற ஒரு சங்கீதம் இருப்பதாக நாம் கேட்டதுமில்லை. நூல்களில் பார்த்துமில்லை , ஆரியர்கள் பாடிக்கொண்டிருப்பதினால் மாத்திரம் ஆரிய சங்கீதம் என்றும் , சமஸ்கிருதத்தில் எழுதியதெல்லாம் ஆரியருக்குச் சொந்தமென்றும் சொல்வது பொருந்தாது”.

கர்நாடக இசை இன்று பெரும்பாலான மக்களிடமிருந்து அன்னியப்பட்டிருப்பதற்கான முக்கிய காரணம் அது பக்தி என்ற ஒரு உணர்ச்சியை மட்டுமே வெளிப்படுத்தி நிற்பதே. அதைத்தான் பாரதி’ ஒரே கதை”என்றான். சினிமாஇசையின் தோற்றம் பெரும்பாலான மக்கள் புதிய இசை வடிவங்களைக் கேட்க வழிசமைத்தது. சினிமா இசையையும் மட்டம்தட்டவும் ,இருட்டிப்பு செய்யவும்,குட்டுவைக்கவும் எத்தனையோ முயற்சிகளை எல்லாம் அவர்கள் செய்தார்கள். சினிமா சங்கீதத்தை வானொலியில் இருட்டிப்பு செய்தார்கள்.

சினிமா இசை உலக மக்களின் உழைப்பில் தோன்றிய இசை வடிவங்களைச் சாரமாக பலவடிவங்களில் நமக்கு அறிமுகம் செய்து பார்ப்பனர்களின் இருட்டடிப்புகளை எல்லாம் முறியடித்துள்ளது. மக்களின் பல விதமான உணர்வுகளையும் பிரதிபலித்தது சினிமாஇசை.

கர்நாடக இசையும் பெரும்பாண்மையான மக்களைச் சென்றடைய வேண்டுமாயின் அது பக்திஉணர்ச்சி என்ற தடையை கடக்க வேண்டும்.

நன்றி ; இனி ஒரு .காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக