வெள்ளி, நவம்பர் 12, 2010

ஓரிடத்தில் குடியிருக்கும் தாயுள்ளம், பேயுள்ளம்! -- அரிமா




தேர்தல் வந்துவிட்டாலேயே பிதற்றல்களும் பித்தலாட்டங்களும் மடை திறந்த வெள்ளம்போலத் தொடங்கிவிடும். அப்படித்தான் தமிழ்நாடு காங்கிரசுக் கட்சித் தலைவர் திரு தங்கபாலு திருவாய் மல(ர்)ந்தருளியுள்ளார். இன்றைய அவரது அறிக்கையிள் சாரம் இதுதான்!

“சோனியா காந்தி பிரதமர் பதவியையே ஏற்க மறுத்து தியாக உணர்வோடு மக்கள் பணியாற்றி வருபவர். குறிப்பாக இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கும் பாசமிகு தாயாகச் செயல்பட்டு வரும் நிகரற்ற தலைவியாவார். ஆனால் அறிக்கைவிட்டு வாய் வீச்சைக்காட்டும் வைகோ இலங்கை தமிழர்களுக்காக இழந்தது என்ன?” என்று கேட்டுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.

இலங்கைப்போர் நிகழ்வுகள் தொடங்கிய காலத்திலும், அது நடைபெறும் நேரத்திலும் அது முடிவுக்கு வந்து சுமூக சூழ்நிலை முழுமையாக உருவாகப்போகும் இன்றைய காலக்கட்டம் வரை அனைத்து நிலைகளிலும் சோனியாகாந்தியின் மனிதாபிமான வழிகாட்டுதலில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளை வைகோ மறந்திருக்கலாம். ஆனால், தமிழக மக்களும், இலங்கைவாழ் தமிழர்களும் ஒருபோதும் மறந்திருக்க மாட்டார்கள்.

போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 2009-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி தமிழக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற உண்ணாநோன்பிலும், அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 7, 8, 9-ந் தேதிகளில் நடைபெற்ற பேரணி, பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டும் என்று சோனியா காந்தி அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.
(பின்னர் தங்கபாலு நடுவணரசு இலங்கைக்குச் செய்துவரும் பொருளாதார உதவிகளைப் பட்டியலிட்டிருக்கிறார்)

தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடிய தலைவர் ராஜீவ்காந்தி அவர்களை கொலை செய்த கொலையாளிகளுக்கு துதிபாடும் வைகோ போன்றவர்கள் இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு கூட எதையும் செய்யும் வாய்ப்பற்றவர்கள் என்பதை மக்கள் அறிவார்கள் என்றும் கூறியுள்ளார் தங்கபாலு.

தங்கபாலு தாயுள்ளம் என்ற பெரிய சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். முட்டைகளை அடைகாத்து, குஞ்சுபொரித்துப் பராமரிக்கிற கழுகுக்கும் பருந்துக்கும் இருப்பது தாயுள்ளம்தான்! கோழி அடைகாத்து பத்து குஞ்சுகளைப் பராமரிக்கும்போது அதற்குப் பேரும் தாயுள்ளம்தான். கழுகு தன் குஞ்சுகளுக்காக கோழிக்குஞ்சுகளை அள்ளிக் கொண்டுபோய் அறுத்து, கிழித்து, கீச் கீச் என்று கதற அதை உணவாக்கி தன் இளசுகளுக்குப் பரிமாறும்போது கழுக்குக்கு அது தாயுள்ளச் செயல்தான். ஆனால், கோழிக்கும் அதன் குஞ்சுகளுக்கும் அது பேயுள்ளம் இல்லையா? பேய்ச் செயல் இல்லையா? கொடூரம் இல்லையா? கொலை இல்லையா?
சோனியாகாந்தியின் உள்ளம் யாருக்குத் தாயுள்ளம்? யாருக்குப் பேயுள்ளம்? என்று எண்ணிப் பார்க்க வேண்டும்!
இந்தியப் படைகளை அனுப்பி, ஆயுதங்களைக் கொடுத்து, வேவு பார்த்து, வேதனையை விதைத்து நம் தமிழ் மக்கள் ஒரு லட்சம் பேருடைய உயிருக்கு உலை வைத்தது மட்டுமல்லாமல் இன்னும் பல்லாயிரக்கணக்கான நம் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பின்றி பெண்டு பிள்ளைகளுக்குப் பாதுகாப்பின்றி நாடோடிகள் போல அலைந்து திரிந்து கிடப்பது தாயுள்ளத்தாலா? அல்லது பேயுள்ளத்தாலா?
தங்கபாலு இன்றைக்கு விட்டிருக்கிற இந்தக் கழிசடை அறிக்கைக்கு அடுத்த செய்தி என்னவென்றால், “யாழ்ப்பாணத்தில துப்பாக்கி முனையில் தமிழர்களை விரட்டிவிட்டு அந்த இடங்களில் சிங்களர்களைக் குடியமர்த்துகிறார்கள்” என்று. ஆக, இன்றைக்கும் நமது மக்கள் சிங்களக் காடையார்களால் தாக்கப்பட்டு தவித்து வரும்போது தாயுள்ளம் என்ன பேன் பார்த்துக் கொண்டா இருக்கிறது?
“பிரதமர் பதவியைத் துறந்து தியாகம் செய்தார்” என்கிறார் தங்கபாலு. 2004ஆம் ஆண்டுத் தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றபோது குடியரசுத் தலைவராக இருந்தவர் தமிழரான அப்துல்கலாம் அவர்கள். ஊருக்கே தெரிந்த ஒரு செய்தி என்னவென்றால், “அன்னிய நாட்டைச் சேர்ந்த சோனியா காந்திக்குத் தான் பதவியேற்பு செய்ய ஒப்புதல் அளிக்க இயலாது” என்று கூறிவிட்டாராம். அதற்குப் பழி தீர்க்கத்தான் திரு. அப்துல்கலாம் மறு தேர்வு செய்யப்பட வாய்ப்பிருந்தபோது காங்கிரசு வஞ்சம் தீர்த்தது. பதவிப் பித்துப் பிடித்தக் கருணாநிதியும் அதற்கு உடன்பட்டார். இதிலென்னடா தியாகமும் ஈகமும் இருக்கிறது?
“வை.கோ. இழந்தது என்ன?” என்று கேட்கிறார்.
ஆட்சியில் அதிகாரத்தில் இருக்கிற நீங்கள் காவிரியில் இரண்டகம் செய்கிறீர்கள், ஈழத் தமிழர்களைக் கொல்கிறீர்கள், தமிழ்நாட்டு மீனவர்களைச் சிங்களன் கொல்லும்போது பாராமுகமாய் இருக்கிறீர்கள். எல்லாத் திட்டங்களுக்கும் நாங்கள்தான் பணம் கொடுக்கிறோம் என்று பிதற்றுகிறீர்கள்.
வை.கோ. எதிர்கட்சியில் இருக்கிறார். தொடர்ந்து ஈழத் தமிழர் பிரச்சினையில் குரல் எழுப்புகிறார். அதற்காகச் சிறை சென்றிருக்கிறார். காங்கிரசுக் கட்சியின் பித்தலாட்டங்க¬ளைப் போல அவர் செய்தது கிடையாது என்றுதான் நம்புகிறோம். கொலைகாரக் காங்கிரசை அம்பலப்படுத்துவதே நற்செயல்தானே!
அடுத்து நமக்கெல்லாம் நமட்டுச் சிரிப்பை ஏற்படுத்தும் வரிகள்! கருணாநிதியின் உண்ணா நோன்புப் போராட்டத்தில் காங்கிரசார் பங்கேற்றார்களாம்.
முதலில் கின்னஸ் புத்தகம் போடுபவனைச் சாத்த வேண்டும். இன்றைக்கு வரை கருணாநிதியின் உண்ணாநோன்பை பதக்கப்பட்டியலில் ஏற்றாமல் இருக்கிறான்! உலகிலேயே மிகக்குறைந்த நேரம் உண்ணாநோன்பு இருந்தவர் யார்? என்றால் அது கருணாநிதியைத் தவிர யாராக இருக்க முடியும்? அப்பப்பா, அல்லது கருணாநிதியின் மொழியில் சொன்னால், அம்மவோ, என்னா நாடகம்? என்னா வேடம்?
ஏண்டா அப்பா, 3 மணி நேரத்திற்கு கடற்கரையில் படுத்து இருந்துவிட்டு உண்ணாநோன்பு முடிந்தது என்று அறிவித்துவிட்டு எழுந்துபோன அந்தப் பித்தலாட்டத்தையா நோன்பு என்று நோகடிக்கிறீர்கள்?
இராசீவ்காந்தியைக் கொன்ற கொலையாளிகளுக்கு வைகோ துதிபாடுவதாகச் சொல்கிறார். ஆக, மீண்டும் ராசீவ் கொலையை நினைவுக்குக் கொண்டுவருகிறார் தங்கபாலு! இராசீவ்காந்தி ஏதோ ஒரு நேர்ச்சியில் (விபத்தில்) சாகவில்லை. விளையாட்டாகவோ, வேண்டுமென்றோ யாரும் அவரைக் கொலை செய்யவில்லை என்று கருதப்படுகிறது. பழி தீர்த்துவிட்டார்கள் என்றும் சொல்கிறார்கள்.
கொலையோடு தொடர்புடையதாகக் கருதப்படும் சந்திராசாமி உள்ளிட்ட பலர் இன்னும் இருக்கிறார்கள். சோனியா காந்தி அவர்களை விட்டுத்தான் வைத்திருக்கிறார். சோனியா காந்திக்கும் இதில் தொடர்புண்டு என்று சுப்பிரமணியசாமி சூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் சொன்னார். அதற்கும் பதில் இல்லை. விடுதலைப் புலிகள்தான் கொன்றார்கள் என்று ஆட்சியிலுள்ள காங்கிரசுக் கட்சி சொல்கிறது. இப்படி, “யார் கொன்றது?” என்ற முடிச்சி அவிழாமல் இறுகிக் கொண்டு இருக்கிறது. கொல்லப்பட்ட இடத்தில் எடுத்த ஒரு முகாடையான படம் கே. ஆர். நாராயணனிடம் மாட்டிக் கொண்டிருக்கிறது. அது விசாரணைக்கு வர மறுக்கிறது என்று அண்மையில் இன்னும் குற்றச்சாட்டுகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன! இந்த ஐயங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இராசீவ் காந்தி அனுப்பிய அமைதிப்படை செய்த அட்டூழியங்களும் கொலைகளும்தான் அவரைப் பழிவாங்கும் நிலைக்குத் தள்ளிவிட்டது என்று விசாரித்தவர்கள், விவரம் அறிந்தவர்கள், தெருவில் நடப்பவர்கள் என்று அனைவருமே சொல்லிவிடுவார்கள். இராச குடும்பத்தில் செத்தால் அது ஒப்பற்ற உயிர்! சரி, மறுக்கவில்லை! அப்படியானல் எங்கள் குடும்பத்தில் கொத்துக் கொத்தாகச் செத்தால் அது என்ன ம..ரா? மழித்து வெளியே போட!
“நாங்கள்தான் காசு கொடுத்தோம், நாங்கள்தான் காசு கொடுத்தோம்” என்று ஒரு பட்டியலையே தங்கபாலு நாயக்கர் விட்டிருக்கிறார்.
போபர்சு ஊழலில் சுருட்டிய பணத்திலிருந்தா அள்ளிக் கொடுத்தீர்கள்?
சோனியாவின் உறவினரான இத்தாலிய குவத்ரோச்சி இந்தியாவில் அடித்த கொள்ளையிலிருந்தா கொடுத்தீர்கள்?
காமன் வெல்த் விளையாட்டுப் போடடிகளில் காங்கிரசுக் கல்மாடி அடித்த கொள்ளைப் பணத்திலிருந்து பகிர்ந்தளித்தீர்கள்?
கார்கில் போரில் மரித்த போர்வீரர்களுக்கு கட்டிய வீடுகளில் அடித்த கொள்ளையில் பங்கு பிரித்துக் கொடுத்தீர்கள்?
அல்லது ஸ்பெக்ட்ரம் ஊழலில் எடுத்த பங்கில் ஒரு பகுதியை ஒதுக்கினீர்களா?
தங்கபாலுவும் அவரது “தாயுள்ளப் புகழ்” சோனியா காந்தியும் ஏதோ பரம்பரைப் பணக்காரர்கள் போலவும் அவர்களது கஜானா பிதுங்கி வழிந்ததிலிருந்து வழித்து எடுத்துக் கொடுத்தது போலவும் தமிழ்நாட்டுத் தலைவர் பிதற்றுகிறார்.
தாய்க்கும் சேயுண்டு! பேய்க்கும் சேயுண்டு! இரண்டு சேயுமே தத்தமது தாய்களைத் “தாய்” என்றுதான் விளிக்கும்! தங்கபாலுவின் தாய் நமக்கு தாயாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை! பேயைத் தாயாக வைத்துக் கொண்டு தாய்மைக்கு இலக்கணம் தேடுகிற தங்கபாலுவுக்குப் பசி வந்துவிட்டது!
இராப்பிச்சைகளுக்கு பகல் பசி வந்துவிட்டது! ஆமாம், தேர்தல் வந்துவிட்டால் இந்தச் சிக்கல்தான்! இனி, “அம்மா, தாயே பிச்சை போடம்மா” என்ற கத்தல்களும் கதறல்களும் கேட்கத் தொடங்கிவிடும்! பேயுள்ளத்தைத் தாயுள்ளம் என்கிறார்! ஈகம் செய்தோம், அள்ளிக் கொடுத்தோம் என்கிறார்!
பித்த வாந்தி இது! கடுக்காய்தான் மருந்து!! இடித்து வையுங்கள்! தேர்தல் நாளன்று நிறையவே தேவைப்படும்!

---- அரிமாவளவன்

செய்தி வெளியீடு : ஊடகபிரிவு , தமிழர் களம் , கரூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக