திங்கள், நவம்பர் 29, 2010

இ‌ந்‌திய நாக‌ரிக‌த்‌தின் அடி‌த்தள‌ம் தமிழ் நாகரிகமே: கோவை ஞா‌னி



அடிப்படையில் நான் சொல்வது என்னவென்று சொன்னால் இன்று வரை மைய அரசோ, இந்தியாவின் பல்கலைக்கழகங்களில் இருக்கக் கூடிய அறிஞர் பெருமக்களோ சமஸ்கிருதம்தான் இந்தியாவினுடைய மூல மொழி, முதல் மொழி, இந்திய மொழிகளுக்கெல்லாம் சமஸ்கிருதம்தான் தாய்மொழி என்ற நம்பிக்கைகளை இன்றும் அவர்கள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இது உண்மையல்ல, இந்திய நாகரிகத்தினுடைய அடித்தளம் தமிழ் நாகரிகம்தான்.

அறிஞர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் ஏற்கனவே சிலவற்றை சொல்லியிருக்கிறார்கள். இந்திய நாகரிகத்தினுடைய மேலடுக்கு ஆரிய நாகரிகம் என்றே வைத்துக்கொண்டாலும் கூட, அடித்தளம் முழுவதும் தமிழ் நாகரிகம் அல்லது திராவிடர் நாகரிகம் என்பதை அறிஞர்கள் பலர் சொல்லியிருக்கிறார்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம்?

WD
இந்திய நாகரிகத்தின் அடிப்படையில் என்றால் வேளாண்மையைச் சொல்ல வேண்டும், நீர்ப் பாசனங்களைச் சொல்ல வேண்டும், கால்நடைகளைப் பற்றி சொல்ல வேண்டும், மருத்துவம் பற்றி சொல்ல வேண்டும். இசை பற்றி, தர்க்கம் பற்றி, மெய்யியல் பற்றி, அறிவியல் பற்றி சொல்ல வேண்டும். இந்தியாவில் இருக்கக் கூடிய வேளாண்மையில் தொடங்கி அறிவியல் வரை அனைத்துத் தளங்களிலும் விளங்கியது தமிழ் நாகரிகம் மட்டும்தான். இவற்றில் ஆரியத்தினுடைய பங்களிப்பு என்பது எள்ளளவும் கிடையாது. வேளாண்மையிலோ, கட்டடக் கலையிலோ, சிற்பத்திலோ, இசையிலோ, மருத்துவத்திலோ, கணிதத்திலோ, தர்க்கத்திலோ தமிழினுடைய பங்களிப்புதான் பெரும் பகுதி உண்டோயொழிய ஆரியத்தின் பங்களிப்பு என்பது பெயரளவிற்கு அங்கொன்று, இங்கொன்று இருக்கலாம் அவ்வளவுதான்.

ஆனால் இந்திய வரலாறு பற்றி ஆய்வு என்று சொன்னவர்களெல்லாம் என்ன சொல்லித் தொலைத்தார்கள் என்றால், எல்லாவற்றையும் சமஸ்கிருதத்திற்கு கொண்டு போய் சேர்த்தார்கள். சமஸ்கிருதம்தான் இந்தியாவினுடைய நாகரிகத்தினுடைய ஆதாரம் என்று சொன்னார்கள். ஆனால், அது முற்றிலும் பொய் என்பதைத் தவிர வேறு வார்த்தைகள் சொல்வதற்கு இல்லை. அத்தனையும் தமிழ் நாகரித்தோடு தொடர்புடையனதான். வட இந்தியாவில் ஹிந்தி போன்று ஏராளமான மொழிகள் இருக்கின்றன. அந்த மொழிகளைப் பார்த்தீர்களென்றால் - பல அறிஞர்கள் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள் - சமஸ்கிருதச் சொற்கள் அங்கும் இங்கும் நிறைந்து கிடந்தாலும் கூட, அந்த வட இந்திய மொழிகள் அத்தனையிலும் இருக்கிற வாக்கிய அமைப்பு என்பது தமிழினுடைய வாக்கிய அமைப்புதான்.

தமிழ் வாக்கியத்தில் நம்முடைய மக்கள், 'காலையில் எழுந்து டிஃபன் பண்ணி, ஃப்ரண்டை சந்தித்துத் திரும்பினேன்' என்று சொன்னால் அந்த வாக்கியம் முழுவதும் தமிழ், இடையில் ஆங்கிலச் சொற்கள். அதேபோலத்தான் வட இந்திய மொழிகள் முழுவதிலும் வாக்கிய அமைப்புகள் உள்ளன. வாக்கிய அமைப்பு என்பது ஒரு மொழியில் எவ்வளவு வலுவான அம்சம் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. வாக்கியம் முழுவதும் தமிழாக இருக்கிறது. இடையில் ஆங்காங்கு சமஸ்கிருதம் ஏராளமாகச் சேர்ந்திருக்கிறது. இந்த வகையில் பார்த்தீர்களென்றால் இன்று இந்தியாவில் தமிழுக்கு மரியாதை இல்லை, தமிழனுக்கு மரியாதை இல்லை.

ஆனால், செம்மொழி ஆய்வு என்கிற முறையில் நீங்கள் இந்த ஆதாரங்களைத் தேடித் தொகுத்து, இதில் தமிழஞர்கள் பெரிய அளவில் ஈடுபடுத்த முடியும் என்று சொன்னால், இந்திய நாகரிகத்தின் அடித்தளம் தமிழ் நாகரிகம் என்பதை மெய்ப்பிக்க முடியும். மா.பி.கந்தையா சொல்லிக் கொண்டிருந்தார், க.ப.வே. சொல்லிக் கொண்டிருந்தார். இன்னும் பல அறிஞர்கள் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதை மெய்ப்பிக்க முடியுமானால், இந்திய அரசியலில், இந்தியாவினுடையபொருளியலில் தமிழனுக்கான இடம் கிடைக்கும்.

இன்று மைய அரசிற்கு அடி வருடியாக, அடிமையாகச் செயல்படக் கூடியவன்தான் மைய அரசினுடைய மரியாதைக்குரியவன். மைய அரசில் செல்வாக்கு பெறவேண்டும் என்று சொன்னால், மைய அரசு, சமஸ்கிருதம், வட இந்திய பெருமைகளையெல்லாம் ஒப்புக்கொண்டவன்தான் இருக்க முடியும்.

சொல்லப்போனால், தமிழ்நாட்டில் பெரியார் இருக்கிறார், திராவிட அரசியல் இருக்கிறது. சமஸ்கிருத மறுப்பு இருக்கிறது. இதனை வட இந்தியர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இதெல்லாம் எவ்வளவு பெரிய உண்மைகள் என்று சொன்னாலும் கூட வடக்கில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இந்திய அரசியலில் தமிழனுக்குரிய மரியாதையை, செல்வாக்கை, அழுத்தத்தைப் பெறுவது என்று சொன்னால், தமிழைச் செம்மொழி என்று ஏராளமான ஆதாரங்களோடு மெய்ப்பிப்பதில் அடங்கியிருக்கிறது என்கிற முறையில்தான் தமிழைச் செம்மொழி என்று அறிவித்த உடனேயே எங்களைப் போன்றவர்கள் பெரிதும் விரும்பினார்கள். ஆனால், அதற்கான திட்டங்கள் ஏதாவது இருக்கிறதா என்று சொன்னால் எதுவம் இல்லை. இந்தத் திட்டங்களை நீங்கள் முன்வைக்கும் போது, இன்றைக்கு நடக்கும் இந்திய அரசியலிற்கு, சமஸ்கிருத மொழிக்கு, ஆரிய ஆதிக்கத்திற்கு, வருணாச்சரமத்திற்கு எதிராக நீங்கள் செயல்படுகின்றீர்கள் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள் என்று அர்த்தம். இதை இந்தியா ஏற்றுக்கொள்ளுமா இல்லையா என்பது மிகப்பெரிய ஒரு கேள்வி.

இன்னொன்று என்னவென்று சொன்னால், திராவிட மொழிகள் என்று சொல்லப்பட்டவை மலையாளம், கன்னடம், தெலுங்கு முதலியவைகளெல்லாம், தமிழைச் செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட உடனேயே கன்னட மொழிக்காரர்களும், தெலுங்கு மொழிக்காரர்களும் ஆத்திரப்பட்டார்கள், எங்களுக்கும் செம்மொழி தகுதி உண்டு, அறிவிக்க வேண்டும் என்று. ஆகவே செம்மொழியினுடைய காலவரையறை 1,000 ஆண்டு என்று நிர்ணயிக்க வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டது.

உலக அளவில் செம்மொழி என்று சீன மொழியோ, கிரேக்க மொழியோ ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று சொன்னால், அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவது. அரசு அதிகாரம், அரசு அனுமதி என்பது தேவையே கிடையாது. நம்ம இந்தியாவில் மட்டும்தான் மத்திய அரசு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஒரு கோரிக்கையைக் கிளப்பி கடைசியில் அதனை ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறோம். இதுவொரு பிறழ்வு என்று வைத்துக்கொண்டாலும் கூட, அந்த வரையறையை நாம் மீறவேண்டியதில்லை.

கன்னட மொழியோ, தெலுங்கு மொழியோ தங்களுக்கும் செம்மொழி தகுதி உண்டு என்று சொல்லும்போது, இல்லையென்பது உண்மையென்றாலும் கூட, உண்டு என்று ஏற்றுக்கொண்டாலும் கூட, அவர்கள் செய்யக்கூடிய ஆய்வு என்னவாக இருக்க வேண்டும்? பேராசிரியல் நாச்சிமுத்து, தற்பொழுது டெல்லியில் ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் பணியாற்றக் கூடியவர். அவர் மிகவும் தெளிவாகச் சொல்கிறார். தமிழுக்கு செம்மொழி தகுதி என்பது கன்னட மொழி பேசுகிறவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், ஆந்திர மொழி பேசுகிறவர்கள், மலையாள மொழிப் பேசுகிறவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏனென்று சொன்னால், செம்மொழி என்பது தமிழனுக்கு மட்டும் உரியது இல்லை. உங்களுக்கும் சேர்த்துதான் இது செம்மொழி. ராமசாமி அவர்கள் கூட ஒருமுறை சொன்னார், கன்னட அறிஞர்களைப் பார்த்துச் சொல்கிறார், கன்னட மொழி ஆய்வு என்று செய்யத் தொடங்கினீர்களென்றால் கடைசியல் நீங்கள் தமிழுக்குப் போய்ச் சேருவீர்கள். உண்மையிலேயே மலையாள மொழியோ, கன்னட மொழியோ, தெலுங்கு மொழியோ தம்மைச் செம்மொழி என்று சரியான முறையில் ஆய்வு செய்வார்களேயானால் அவர்கள் தமிழுக்கு வந்துச் சேருவார்கள். அதனா‌ல், இந்த வகையான ஆய்விற்கு நாம் ஊக்கமளிக்க வேண்டும்.

இன்னொன்றைச் சொல்லி எனது கருத்தை முடித்துக்கொள்ள விரும்புகிறேன். அது, தமிழ் மொழி ஆய்வு என்பது தமிழனுக்கு விடுதலை தரவேண்டும் என்று நான் சொன்னேன். தமிழியல் ஆய்வு என்பது மக்களோடு சம்பந்தப்பட்டது. காவிரி, வைகை, தாமிரபரணியோடு, இங்கிருக்கக்கூடிய நீரோடு, நிலத்தோடு, காடுகளோடு, இங்கிருக்கக் கூடிய வாழ்க்கையோடு, இங்கிருக்கக் கூடிய மக்கள் வாழ்க்கை மேம்பாட்டோடு சம்பந்தப்பட்டது.

அப்படியிருக்கும்போது, இங்கு காவிரி இல்லை, வைகை இல்லை, தாமிரபரணி இல்லை என்று சொன்னால், இங்கு தமிழனுக்கு என்ன வாழ்வு? தமிழ் மொழிக்குதான் என்ன வாழ்வு? அதேபோல, இங்கிருக்கக் கூடிய நீர்நிலைகளில் பன்னாட்டு நிறுவனங்கள் வந்து உட்கார்ந்துகொண்டு, அவர்கள் நிலத்தடி நீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்தால் தமிழனுடைய வாழ்வு, தமிழ் மக்களுடைய வாழ்வு என்ன ஆகும்?

செம்மொழி ஆய்வு என்பது சொல்லக்கூடிய இந்தத் திசையில் போய் கடைசியில், தமிழ்நாடு தமிழனுக்குரிய நாடாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டு அரசியலில் தமிழனுக்குத்தான் செல்வாக்கு, தமிழக பொருளியலை நிர்ணயிக்கக் கூடியவன் தமிழனாகத்தான் இருக்க வேண்டும், தமிழ் மக்களாகத்தான் இருக்க வேண்டும். தமிழனுடைய நீர்நிலைகள் மற்றும் இயற்கைச் செல்வங்களையெல்லாம் அந்நியருக்கு நாம் விட்டுக்கொடுக்க முடியாது.

இதெல்லாம் கூட ஆய்வினுடைய நோக்காக இருக்க வேண்டும். தமிழறிஞர்கள் என்று சொல்லக்கூடியவர்களுக்கு இந்த அக்கறையும் வேண்டும். ஏதோ மொழி ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி என்பது மக்களிடத்தில் இருந்து விடுபட்டு, நீரோடு நிலத்தோடு விடுபட்டு, உழவர்களோடு, நெசவாளிகளோடு, கலைஞர்களோடு, சிற்பத்தோடு, சமயத்தோடு விடுபட்டுச் செய்யக் கூடிய ஆய்வாக இருக்கவே முடியாது. இவற்றையெல்லாம் உள்ளடக்கிய ஆய்வுதான் தமிழனுக்கான விடுதலையைப் பற்றிய ஆய்வாகவும் இருக்க முடியும். இதுதான் என்னுடைய பொதுவான ஒரு கருத்து.
நன்றி : வெப்உலகம் .காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக