புதன், மார்ச் 20, 2013

கழுவிலேற்றப்பட வேண்டியது ராசபக்சே மட்டுமல்ல!

20.03.13


மணப்பாறை நகரில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமிழீழம் கோரி நேற்று உண்ணாநோன்பு இருந்தனர்.  மாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நகரின் வீதிகள் வழியாக தமிழீழம் ஒன்றே தீர்வு என்று முழக்கமிட்டு நகர்வலம் வந்தனர்.  அவர்கள் நடுவில் உரையாற்றிய திரு. அரிமாவளவன், “ராசபக்ச ஒரு போர்க்குற்றவாளி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.  அனைத்துலக நீதி மன்றத்தின் முன்பாக அவன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு செய்த படுகொலைகளுக்கும் பாதகங்களுக்கும் தண்டனையாக அவனைத் தூக்கிலிட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு அணு அளவும் இடமில்லை.  ஆனால் ஈழத்தில் நடந்த மாந்தப் படுகொலைகளுக்கு அவன் மட்டுமா காரணம்?  இலங்கைப் படைகள் மட்டும் தனித்து நின்று விடுதலைப் புலிகளோடு மோதியிருக்குமானால் தலைவர் பிரபாகரன் தலைமையில் என்றைக்கோ தமிழீழம் அமைந்திருக்கும்.  ஆனால், இனவெறி பிடித்த நாடுகள் உடனிருந்து ஓர் இனப்படுகொலையை நிகழ்த்தின.  அவைகள் இன்று இலங்கை என்ற முகமூடிக்குள் ஒளிந்து கிடக்கின்றன.  இலங்கைக்கு ஆயுதங்களும், இராசயண ஆயுதங்களும், கொத்துக் குண்டுகளும், தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும் வழங்கியது இந்தியா இல்லையா?  இலங்கைக்கு ஆதரவாக படைகளை அனுப்பியது தில்லி ஆட்சியாளர்கள் இல்லையா?  உளவு சொன்னது இவர்கள் இல்லையா?  போருக்குப் பணம் கொடுத்தது இவர்கள் இல்லையா?  அங்கு அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது இவர்கள் இல்லையா?  உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தானே தீர வேண்டும்!  இந்திய இலங்கைக் கூட்டோடு சீனாவும், பாக்கிஸ்தானும் கூடிச் சேர்ந்து கோரத் தாண்டவம் ஆடவில்லையா?  இவர்களுக்கு எல்லாம் மேலாக தமிழினத்தின் காவலனாக வேலேந்தி நிற்க வேண்டிய கடமையிலிருந்த தமிழக அரசு என்ன செய்தது?  மேனனும், நாராயணனும் கொழும்புக்கு ஓரோடிச் சென்று ஆதரவு அளித்த போது சென்னைக் கோபாலபுரத்தின் கதவுகளைத் தட்டி ஆலோசனையும் ஆதரவும் பெற்ற பின்னர்தானே சென்றார்கள்.  9 ஆண்டுகாலம் அவர்களோடு கூடிக்குலவி ஆட்சி சுகம் கண்ட கருணாநிதி இன்று பதவியைத் தூக்கி எறிவதால் மட்டும் குற்றாவாளிக் கூண்டில் இருந்து இறக்கிவிடலாமா?  இப்படி இவர்களையெல்லாம் தப்பவித்துவிட்டு இராசபக்சேவை மட்டும் தூக்கிலிட்டால் தமிழீழ மண்ணில் உயிரை விதையாக்கிய ஆயிரமாயிரம் பச்சைக் குழந்தைகளின் உயிர்கள் அதை மன்னிக்குமா?  உயிர் கொடுத்த போராளிகளும், உயிர் நீத்த அப்பாவி மக்களும், ஏற்றுக் கொள்வார்களா?  எனவே ஒரு கயவனை மட்டுமல்ல பல கயவர்களின் கணக்குகளை சரி பார்க்கும் நேரமிது” என்று அரிமாவளவன் தன் உரையில் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக