வியாழக்கிழமை, டிசம்பர் 22, 2011, 12:51
மதுரை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாட்டை கண்டித்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நடந்து வரும் இந்தப் போராட்டத்தால் இந்த மாவட்டங்களில் மருந்துக் கடைகளைத் தவிர மற்ற அத்தனை கடைகளும் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டுள்ளன.
முல்லைப்பெரியாறு அணையில் புதிய அணை கட்டவேண்டும் என்பது கேரள அரசின் நிலைப்பாடு. ஆனால் புதிய அணை கட்டப்பட்டால் முல்லைப்பெரியாறு அணையை நம்பியுள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் விவசாயம் பொய்த்துப்போகும் என்பது தமிழக விவசாயிகளின் கவலை. மேலும் தமிழகத்தின் உரிமையான முல்லைப் பெரியாறை இடிக்க ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
எனவே புதிய அணை கட்ட தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்துள்ளது. கடந்த ஒருமாத காலமாக தினம் ஒரு போராட்டம் என கேரள அரசுக்கு எதிராக தமிழக மக்கள் போராடி வருகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு தமிழர்கள் ஒட்டுமொத்தமாக, ஒரே கருத்துடன் திரண்டு போராடி வருவதால் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது தமிழகம்.
5 மாவட்டங்கள் கடையடைப்பு
இந்த நிலையில் அணையை பாதுகாக்க வலியுறுத்தி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் வணிகர் சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் 5 மாவட்டங்களிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
வெறிச்சோடிய தெருக்கள்
அனைத்து மாவட்டங்களிலும் முழுக் கடையடைப்பு முழு வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. கடைவீதிகள் அனைத்தும் வெறிச்சோடிக் கிடக்கின்றன. மருந்துக் கடைகள் மட்டும் இயங்கி வருகின்றன.
தேனி மாவட்டத்தில் கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், உத்தமபாளையம் என அனைத்து முக்கிய ஊர்களிலும் மயான அமைதி காணப்படுகிறது. எந்தக் கடையும் திறக்கப்படவில்லை.
இதே போல சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், மதுரையிலும் நிலை உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி ஆகியவையும் நடைபெற்றுள்ளன

தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக